இந்தியா

களங்கப்படுத்தும் முயற்சி; எந்த ஆவணங்களும் வெளியிடவில்லை: ஆர்எஸ்எஸ் மறுப்பு

பிடிஐ

புதிய அரசியலமைப்புச் சட்டம் என்ற பெயரில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் உருவப்படத்துடன் எந்தவிதமான வரைவு ஆவணங்களும் வெளியிடவில்லை. இது திட்டமிட்டு அமைப்பைக் களங்கப்படுத்தும் முயற்சி என்று ஆர்எஸ்எஸ் விளக்கம் அளித்துள்ளது.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் உருவப்படத்துடன், புதிய அரசியலமைப்புச் சட்டம் என்ற பெயரில் 15 பக்கத்தில் வரைவு ஆவணங்கள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டன. இதை யார் வெளியிட்டது என்ற விவரம் தெரியவில்லை என்றாலும், புதிய அரசியலமைப்புச் சட்டம் என்ற பெயரில் வெளியாகி பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூத்த தலைவர் ஸ்ரீதர் காட்கே இன்று நாக்பூரில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அதில் அவர் கூறுகையில், " புதிய அரசியலமைப்புச் சட்டம் என்ற பெயரில் தலைவர் மோகன் பாகவத் உருவப்படத்துடன் 15 பக்க ஆவணங்கள் (பிடிஎப் வடிவில்) சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. அதுபோன்ற ஆவணங்கள் எதையும், ஆர்எஸ்எஸ் அமைப்பு வடிவமைக்கவும் இல்லை, வெளியிடவும் இல்லை.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் முயற்சியில் இதுபோல் சிலர் செய்கிறார்கள். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது ஆர்எஸ்எஸ் முழுமையாக நம்பிக்கை வைத்துள்ளது. எந்தவிதமான புதிய அரசியலமைப்புச் சட்டம் குறித்து ஏதும் முன்வைக்கவில்லை.

ஆர்எஸ்எஸ் அமைப்போ, அதன் தலைவரோ இதுபோன்ற எந்தவிதமான ஆவணத்தையும் வெளியிடவில்லை. இந்த ஆவணத்தில் ஆட்சேபனைக்குரிய கருத்துகள் இடம் பெற்றுள்ளன. அதற்கும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் தொடர்பில்லை. இது ஆர்எஸ்எஸ் அமைப்பையும், அதன் தலைவரையும் களங்கப்படுத்தச் செய்யப்பட்ட செயலாகும். இந்த ஆவணங்கள் குறித்து கோட்வாலி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பின்புலத்தில் யார் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை" எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT