இந்தியா

ஓமன் மன்னரின் மரணத்திற்கு இந்தியா நாளை துக்கம் அனுஷ்டிப்பு

ஐஏஎன்எஸ்

கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக அரபு நாட்டை ஆண்ட பின்னர் 79 வயதில் இறந்த ஓமனின் சுல்தான் காபூஸ் பின் சையத் அல் சையத்தின் மரணத்திற்காக ஒருநாள் தேசிய அளவில் துக்கம் அனுஷ்டிப்பதாக இன்று அறிவித்துள்ளது.

ஓமன் மன்னர் காபூஸ் பின் சைத் சில மாதங்களாகவே உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த டிசம்பர் மாதம் சிகிச்சைக்காக பெல்ஜியம் சென்று வந்த நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக காபூஸ் பின் சைத் மரணமடைந்ததாக நேற்று ( சனிக்கிழமை) ஓமன் அரசு தெரிவித்தது. பிரதமர் மோடி, ஓமன் மன்னர் காபூஸ் அல் சைத்துக்கு இரங்கல் தெரிவித்த நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

நாடு தழுவிய துக்க அனுஷ்டிப்பு தொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

காபூஸ் பின் சையத் அல் சையத் 2020 ஜனவரி 10 அன்று காலமானார். மறைந்த தலைவருக்கு மரியாதை செலுத்தும் அடையாளமாக, இந்தியா முழுவதும் ஜனவரி மாதம் 13ஆம் தேதி (திங்கள்கிழமை) ஒரு நாள் அரசு துக்கம் அனுஷ்டிக்கப்படும் என்று இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, திங்கள்கிழமை அன்று நாடு முழுவதும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும், அன்றைய தினம் உத்தியோகபூர்வ பொழுதுபோக்கு எதுவும் இருக்காது. இது அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் அனைத்து யூனியன் பிரதேசங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது வாரிசாக முன்னாள் வாரிசு யாரும் இல்லாததால்.கலாச்சாரத்துறை அமைச்சராக பணியாற்றி வந்த ஹைதம் பின் தாரிக் ஓமனின் புதிய மன்னராக சனிக்கிழமை பதவியேற்றார்.

SCROLL FOR NEXT