தென்பெண்ணை நதி நீர் பங்கீட்டு வழக்கில் தமிழகம் தாக்கல் செய்துள்ள மனுவை தள்ளுபடி செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு புதிய மனு தாக்கல் செய்துள்ளது.
கர்நாடக மாநிலம் சிக்கபள்ளாப்பூர் மாவட்டத்தில் உள்ள நந்திமலையில் தென்பெண்ணை ஆறு உற்பத்தி ஆகிறது. சிக்கபள்ளாப்பூர், கோலார், பெங்களூரு ஆகிய மாவட்டங்களை கடந்து தமிழகத்தில் நுழையும் தென்பெண்ணை கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களை கடந்து வங்கக் கடலில் கலக்கிறது. 432 கி.மீ. நீளமுள்ள இந்த ஆறு கர்நாடகாவில் 110 கி.மீ. தூரமும் தமிழகத்தில் 322 கி.மீ. தூரமும் பாய்கிறது.
இந்நிலையில் கடந்த 2012-ல் பெங்களூரு ஊரகம், கோலார் ஆகிய மாவட்டங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக தென்பெண்ணை ஆற்றின் முக்கிய துணை நதியான மார்க்கண்டேய நதியின் குறுக்கே அணைக் கட்டும் பணியில் கர்நாடக அரசு இறங்கியது. இதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் கடந்த நவம்பரில் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் தென்பெண்ணை நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு தாக்கல் செய்தது. அதில், ‘‘தென்பெண்ணை ஆற்றில் கர்நாடகா 50 மீட்டர் உயரத்தில் பெரிய அணையாக கட்டுவதால், ஆற்றின் நீர்ப்போக்கு மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆறு தமிழகத்தில் 80 சதவீதம் பாய்வதால் கர்நாடகா இதில் முழு உரிமை கோர முடியாது.
ஏற்கெனவே கர்நாடகா - தமிழகம் இடையே தென்பெண்ணை நதிநீர் பங்கீட்டில் சிக்கல் நீடிக்கும் நிலையில், தற்போது கட்டப்படும் அணையால் இந்த சிக்கல் மேலும் அதிகரிக்கும். மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீட்டை தீர்க்க நீர் தாவா சட்டத்தின் கீழ் தீர்ப்பாயம் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
தீர்ப்பாயம் அமைக்கப்படும் வரை தென்பெண்ணை ஆற்றில் அணைக் கட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும்" என கோரியது.
80 சதவீத பணி நிறைவு
இதற்கு கர்நாடக அரசு நேற்று தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், "தென்பெண்ணை ஆற்றின் துணை நதியான மார்க்கண்டேய நதியின் குறுக்கே தான் அணை கட்டப்படுகிறது. தமிழகத்துடன் நேரடியாக பாயும் தென்பெண்ணை ஆற்றில் இந்த அணை கட்டப்படவில்லை. கடந்த 2013-ம் ஆண்டு ரூ. 240 கோடி மதிப்பீட்டில் அணை கட்டுமானப் பணி தொடங்கி, தற்போது 80 சதவீத பணி நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் இந்த திட்டத்தை கைவிடுவது மிகவும் கடினம்.
இந்த அணையால் கர்நாடகாவில் 45 கிராம மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும். தற்போது இந்த திட்டத்தை கைவிட்டால் பொருளாதார அளவிலான நஷ்டமும், 45 கிராம மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும். எனவே தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்" என்று கோரியுள்ளது.