இந்தியா

குடியுரிமைச் சட்டத்திற்கு எதிர்ப்பு: ஹைதராபாத்தில் பிரமாண்ட பேரணி

செய்திப்பிரிவு

ஹைதராபாத்தில் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக இன்று பிரமாண்ட பேரணி நடைபெற்றது.

மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லிம்களுக்கு இந்த சட்டத்தில் இடம் அளிக்கப்படவில்லை.

கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்களாகக் கருதப்படுவர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில், மேற்கு வங்கம், டெல்லி, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. பல்வேறு மாநிலங்களிலும் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்தநிலையில் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக இன்று பிரமாண்ட பேரணி நடைபெற்றது. இதில் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர். மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தை மட்டுமல்லாமல், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடியுரிமை பதிவேடு உள்ளிட்டவற்றை கைவிட வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

SCROLL FOR NEXT