போலியான செய்திகளை வெளியிடுவதாக இந்திய வெளியுறவுத்துறை விமர்சித்ததை அடுத்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், தனது ட்விட்டர் கணக்கிலிருந்து வீடியோக்களை நீக்கினார்.
முஸ்லிம்களுக்கு எதிராக உ.பி.யில் போலீஸார் நடவடிக்கை என்று கூறி, இம்ரான் கான் ட்விட்டரில் ஒரு வீடியோவை வெளியிட்டார். "உ.பி.யில் முஸ்லிம்களுக்கு எதிரான இந்திய காவல்துறை படுகொலை" என்று அதற்கு அவர் தலைப்பிட்டார்.
இம்ரான் வெளியிட்ட வீடியோ குறித்து ட்விட்டரில் பல்வேறு விமர்சனங்களும் கண்டனங்களும் எழுந்தன. ஆனால் அது பொய்யானது என சிறிது நேரத்திலேயே நிரூபணமானது. இம்ரான் பகிர்ந்த வீடியோ வங்கதேசத்தில் நடந்த ஒரு சம்பவமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை அடுத்து இம்ரான் கானின் செயலைக் கண்டித்தும் கண்டனக் கருத்துகள் குவிந்தன.
இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பிரதமர் போலிச் செய்திகளை வெளியிட்டு வருவதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கடுமையாக விமர்சித்து.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் ட்விட்டரில், ''போலிச் செய்திகளை ட்வீட் செய்யுங்கள். அதையே பிடித்திருங்கள், பிறகு ட்வீட்டை டெலிட் செய்துவிடுங்கள். மீண்டும்...'' என்று தெரிவித்து #Old habits die hard என்ற ஹேஷ்டேக்கையும் இணைத்துப் பதிவிட்டுள்ளார்.
இதற்கு பாகிஸ்தான் தரப்பிலிருந்து எந்தவொரு எதிர்வினையும் வரவில்லை.