இந்தியா

திருச்சானூர் கோயிலில் வரலட்சுமி விரதம்: தங்க தேரில் பத்மாவதி தாயார்

செய்திப்பிரிவு

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் நேற்று வரலட்சுமி விரதம் வெகு சிறப்பாக நடை பெற்றது. மாலையில் தங்கத் தேரில் பத்மாவதி தாயார் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

திருமலை-திருப்பதி தேவஸ் தானம் சார்பில் நேற்று வரலட்சுமி விரத பூஜைகள் சிறப்பாக நடை பெற்றன. ஆந்திரா, தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களில் உள்ள 230 கோயில்களில் இந்த நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

இதில் குறிப்பாக அலர்மேலு மங்காபுரம் என்று அழைக்கப்படும் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் சிறப்பு கலச பூஜை நடைபெற்றது. இதையொட்டி கோயில் வளாகம் முழுவதும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. ஆஸ்தான மண்டபத்தில் அஷ்ட லட்சுமி அவதாரங்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டன. உற்சவரான பத்மாவதி தாயார் வரலட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஆகம விதிகளின்படி வரலட்சுமி விரதம் கடைப்பிடிக்கப்பட்டது. பின்னர் இந்த பூஜையில் பங்கேற்ற அனைவருக்கும் வரலட்சுமி விரத கங்கணங்கள் வழங்கப்பட்டன.

மாலையில் பத்மாவதி தாயார் தங்க ரதத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தேரை பக்தர்கள் ஏராளமானோர் வடம் பிடித்து இழுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி சாம்பசிவ ராவ், அறங்காவலர் குழு தலைவர் சதலவாடா கிருஷ்ண மூர்த்தி மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT