ஜார்க்கண்ட் மாநிலத்தில் நம் ஆட்சி அமையும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த நவம்பர் 30 முதல் டிசம்பர் 20-ம் தேதி வரை 5 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. ஆளும் பாஜக, காங்கிரஸ்-ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா-ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணிக்கு இடையே போட்டி நிலவுகிறது.
மாநிலத்தில் மொத்தம் 81 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. பெரும்பான்மையை நிரூபிக்க 42 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. இந்நிலையில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டு, அதன்பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
முதல் சுற்று முடிவில் பாஜக 11 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இதுதவிர, காங்கிரஸ் 7 தொகுதிகளிலும், ஆர்ஜேடி 3 தொகுதிகளிலும், ஜெஎம்எம் (ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா) 5 இடங்களிலும், ஏஜெஎஸ்யூ ஒரு இடத்திலும் முன்னிலை வகிக்கின்றன.
இதற்கு முன்னதாக, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் நேற்று இரவு தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ''நாளைய பொழுது நல்ல பொழுதாக விடியும். ஜார்க்கண்ட் மாநிலத்தில் நம் ஆட்சி அமையும் என்ற நம்பிக்கையுடன் உறங்கப் போகிறேன்'' என்று தெரிவித்தார்.