இந்தியா

பெண்களை இழிவுபடுத்தி புத்தகம் சசிதரூருக்கு எதிராக பிடிவாரண்ட்

செய்திப்பிரிவு

காங்கிரஸ் மூத்த தலைவரும் திருவனந்தபுரம் தொகுதி எம்.பி.யுமான சசிதரூர் ‘தி கிரேட் இண்டியன் நாவல்’ என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதினார். 1989-ம் ஆண்டு இந்தப் புத்தகம் வெளியானது. இதில் கேரளாவைச் சேர்ந்த நாயர் சமூகப் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் எழுதியிருப்பதாகக் கூறி சசிதரூருக்கு எதிராக திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் சந்தியா என்ற வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் பலமுறை சம்மன் அனுப்பியும் சசிதரூர் ஆஜராகவில்லை. எனவே, சசிதரூருக்கு எதிராக கடந்த சனிக்கிழமை பிடிவாரண்ட் பிறப்பித்து திருவனந்தபுரம் கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுகுறித்து ட்விட்டரில் சசிதரூர் நேற்று வெளியிட்ட பதிவில், ‘நீதித்துறை மீது மிகுந்த மதிப்பு வைத்துள்ளேன். நீதிமன்றத்தை அவமதிக்கும் எண்ணம் இல்லை. நீதிமன்றம் மூலம் எனக்கு சம்மன்கள் வந்தன. ஆனால், எந்த தேதியில் நான் ஆஜராக வேண்டும் என்று அதில் குறிப்பிடப்படவில்லை. இதுதொடர்பாக ஏற்கெனவே நீதிமன்றத்தில் வழக்கறிஞர் மூலம் தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டு புதிய சம்மன் அனுப்பப்படும் என்று தெரிவித்தது. இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுகி விளக்கம் பெறுவோம்’’ என்று தெரிவித்துள்ளார். தனக்கு வந்த சம்மன்களையும் ட்விட்டரில் சசிதரூர் பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT