இந்தியா

தேசவிரோத காட்சிகளை ஒளிபரப்ப வேண்டாம்: ஊடகங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

தேச விரோத நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் விதமான காட்சிகளை ஒளிபரப்ப வேண்டாம் என செய்தி ஊடகங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. இதில் பல பகுதிகளில் கலவரங்களும், வன்முறையும் ஏற்பட்டுள்ளதால் சட்டம்-ஒழுங்கு பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

இதனிடையே, வன்முறையை தூண்டும் விதமான காட்சிகளை ஒளிபரப்ப வேண்டாம் என செய்தி சேனல்களுக்கு கடந்த 11-ம் தேதி மத்திய அரசு சார்பில் அறிவிக்கைகள் அனுப்பப்பப்பட்டன. எனினும், கலவரங்கள் தொடர்பான காட்சிகளை ஊடகங்கள் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன. இந்த சூழலில், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் செய்தி ஊடகங்களுக்கு புதிய சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

தேசவிரோத நடவடிக்கைகளையும், வன்முறைகளையும் ஊக்குவிக்கும்விதமான காட்சிகளை ஒளிபரப்புவதிலிருந்து ஊடகங்கள் விலகியிருக்க வேண்டும். அதேபோல், குறிப்பிட்ட தரப்பினருக்கு எதிரானதாகவோ, நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் விதமாகவோ அமைந்திருக்கும் காட்சிகளையும் ஒளிபரப்ப வேண்டாம் என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT