டெல்லியில் நடந்த வன்முறை சம்பவங்களில் ஆம் ஆத்மியை தொடர்புபடுத்தி சிக்க வைக்க முயற்சி நடப்பதாக அம்மாநில முதல்வர் கேஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது.
இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லிம்களுக்கு இந்த சட்டத்தில் இடம் அளிக்கப்படவில்லை.
கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்களாகக் கருதப்படுவர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில், மேற்கு வங்கம், டெல்லி ஆகிய மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
டெல்லி ஜாமியா நகரில் காங்கிரஸின் தேசிய மாணவர் கூட்டமைப்பு, ஜாமியா மிலியா இஸ்லாமிய மாணவர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. அப்போது வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து போலீஸார் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்து தடியடி நடத்தினர்.
கிழக்கு டெல்லியில் சீலாம்பூரில் உள்ள ஜாபர்பாத் பகுதியில் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து நேற்று நடைபெற்ற போராட்டத்திலும் வன்முறைச் சம்பவங்கள் நடந்தன.
இந்தநிலையில் டெல்லியில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியதாவது:
‘‘டெல்லியில் நடந்த வன்முறை சம்பவங்களில் ஆம் ஆத்மியை தொடர்புபடுத்தி சிக்க வைக்க முயற்சி நடக்கிறது. இதுபோன்ற செயல்களை ஆம் ஆத்மி ஏன் செய்ய வேண்டும். இதனால் எங்களுக்கு என்ன பயன். நாங்கள் அமைதி காத்து வருகிறோம். தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் உள்ளவர்கள் தான் கலவரத்தை தூண்டுகிறார்கள்’’ என அரவிந்த் கேஜ்ரிவால் கூறினார்.