குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து டெல்லியின் சீலாம்பூரில் இன்று நடந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. ஏராளமான பேருந்துகள் கல்வீசி தாக்கப்பட்டன. போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லிம்களுக்கு இந்த சட்டத்தில் இடம் அளிக்கப்படவில்லை.
கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்களாகக் கருதப்படுவர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில், மேற்கு வங்கம், டெல்லி ஆகிய மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
டெல்லி ஜாமியா நகரில் காங்கிரஸின் தேசிய மாணவர் கூட்டமைப்பு, ஜாமியா மிலியா இஸ்லாமிய மாணவர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. அப்போது வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து போலீஸார் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்து தடியடி நடத்தினர். இந்த சம்பவத்துக்கு நாடுமுழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்தநிலையில் கிழக்கு டெல்லியில் சீலாம்பூரில் உள்ள ஜாபர்பாத் பகுதியில் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து இன்று போராட்டம் நடைபெற்றது. நூற்றுக்கணக்கானோர் திரண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
அப்போது அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக செல்ல முற்பட்டனர். ஆனால் அதற்கு போலீஸார் அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து கூட்டத்தின் ஆவேசமடைந்தனர். கூட்டத்தில் திடீரென வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. அந்த வழியாக வந்த வாகனங்கள் மீது சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
மேலும் போலீஸார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து தடியடி நடத்தியதுடன், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போலீஸார் கூட்டத்தை கலைத்தனர்.