இந்தியா

லக்னோவிற்கும் பரவிய மாணவர் போராட்டம்: நத்வா மதரஸா கல்லூரியின் வெளியே மோதல்

ஆர்.ஷபிமுன்னா

டெல்லியின் ஜாமியா மிலியா இஸ்லாமியா, உபியின் அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தில் நடைபெற்ற போலீஸார் அத்துமீறலை கண்டித்து லக்னோவிலும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதில் அவர்களுக்கு போலீஸாருடன் நிகழ்ந்த மோதலால் கனவரி 5 வரை மூடப்பட்டது.

உபியின் தலைநகரான லக்னோவில் உள்ள பழமையான முஸ்லிம் தனியார் கல்லூரியாக இருப்பது நத்வா. இதில் மதரஸா கல்வியும் நடைபெறுவதால் அங்கு முஸ்லிம் மாணவர்கள் அதிகம் பயில்கின்றனர்.

குடியுரிமை சட்டதிருத்த மசோதாவை எதிர்த்து டெல்லியின் ஜாமியா மில்லியா இஸ்லாமியா மற்றும் உபியின் அலிகர் முஸ்லிம் பல்கலைழகத்தின் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் நேற்று இரவு நிகழ்ந்த கலவரத்தை கண்டித்து லக்னோவிலும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

இதன் உள்ளே தங்கி இருக்கும் விடுதிகளின் மாணவர்கள் நேற்று நள்ளிரவில் இங்கு போராட்டம் துவங்கினர். இதில், டெல்லி மற்றும் உபி போலீஸாரின் அத்துமீறலை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

இன்று காலையும் தொடர்ந்த இந்த போராட்டம் மதியம் வன்முறைக்கு பின் கலைந்தது. இதில் நத்வா மதரஸா கல்லூரியின் வெளியே பாதுகாப்பிற்கு நின்றிருந்த உபி போலீஸாருடன் மோதல் ஏற்பட்டது.

இருதரப்பினராலும் நடைபெற்ற கல்வீச்சில் துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டது. கண்ணீர்புகை குண்டுகளும் வீசி மாணவர்களின் கூட்டம் கலைக்கப்பட்டது.

இந்த போராட்டத்தில் அப்பகுதியை சுற்றியுள்ள பகுதியின் முஸ்லிம்கள் பலரும் நத்வா மாணவர்களுக்கு ஆதரவளித்தனர். இதனால், அந்த போராட்டம் மதக்கலவரமாக மாறும் அபாயம் இருந்தது.

இதைக்கேள்விப்பட்ட உபி மாநிலக் காவல்துறை அவ்வாறு மாறிவிடக் கூடாது என்பதற்காக தனது ஐஜியான எஸ்.கே.பகேல் தலமையில் போலீஸ் படை அனுப்பி வைத்திருந்தது. இவர்களுடன் லக்னோவின் ஆட்சியரான மற்றும் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரும் நேரில் வந்திருந்தனர்.

இவர்களுக்கு உதவியாக நத்வா கல்லூரியின் துணை முதல்வரான மவுலானா அப்துல் அஜீஸ் மற்றும் பேராசிரியர் மவுலானா பைஸான் ஆகியோர் இருந்தனர். இவர்கள் அங்கு மாணவர்கள் அல்லாதவர்களை போலீஸாருக்கு அடையாளம் காட்டினர்.

இதனிடையே, நத்வா கல்லூரியின் போராட்டம் அந்நகரில் உள்ள இண்டகரல் முஸ்லிம் நிகர்நிலைப் பல்கலைகழகத்திலும் பரவி விடாமல் தடுக்க மூன்று நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது

SCROLL FOR NEXT