குடியுரிமை மசோதாவை வடகிழக்கு மாநிலங்கள் எதிர்ப்பது ஏன் என்பது பற்றி உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளித்துள்ளார்.
பாகிஸ்தானில் இருந்து அகதிகளாக இந்தியாவுக்கு வரும் முஸ்லிம்களுக்கும் குடியுரிமை அளிக்க வேண்டுமா என மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கேள்வி எழுப்பினார்.
குடியுரிமைத் திருத்த மசோதாவை மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிமுகம் செய்தார். ஏறக்குறைய 9 மணிநேரம் நீண்ட விவாதத்துக்குப்பின் மசோதா நள்ளிரவில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 311 உறுப்பினர்களும், எதிராக 80 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
குடியுரிமை திருத்த மசோதாவில் சில முக்கியத் திருத்தங்களைக் கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கக் குடியுரிமை மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மசோதாவில் மதரீதியாக மக்களைப் பிரித்து குடியுரிமை வழங்க மத்திய அரசு முயல்கிறது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
இந்தநிலையில் குடியுரிமை மசோதா இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் குடியுரிமை மசோதா மீதான விவாத்தின்போது அமித் ஷா குறிக்கிட்டு பேசியதாவது:
‘‘வங்கதேசத்தவரின் ஊடுருவலுக்கு எதிராக அசாம் மக்கள் நீண்டகாலமாக போராடி வருகிறார்கள். வங்கதேசத்தில் இருந்து அகதிகளாக வந்த இந்துக்களுக்கு குடியுரிமை வழங்கினால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என அசாம் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களில் வாழும் பழங்குடியின மக்கள் எண்ணுகின்றனர்.
எனவே அவர்களது பிரச்சினையை தீர்க்க மத்திய அரசு கமிட்டி ஒன்றை அமைத்துள்ளது. அந்த கமிட்டி அளிக்கும் பரிந்துரைக்கு ஏற்ப பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். அசாம், மணிப்பூர், மிசோரம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகள், இந்த குடியுரிமை மசோதாவின் கீழ் வராத என ஏற்கெனவே தெரிவித்து விட்டோம்.
கடந்த 1985-ம் ஆண்டு பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி அசாம் மாநிலத்தில் ஊருவலை தடுத்து நிறுத்த சட்டம் கொண்டு வருவதாக கூறினார். 35 ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால் காங்கிரஸ் அதை செய்யவில்லை. பிரதமர் மோடி பதவியேற்ற பிறகே இதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்’’ எனக் கூறினார்.