குடியுரிமைத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வட கிழக்கு மாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
குடியுரிமைத் திருத்த மசோதாவை மக்களவையில் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிமுகம் செய்தார். ஏறக்குறைய 9 மணிநேரம் நீண்ட விவாதத்துக்குப்பின் மசோதா நள்ளிரவில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 311 உறுப்பினர்களும், எதிராக 80 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
குடியுரிமை திருத்த மசோதாவில் சில முக்கியத் திருத்தங்களைக் கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கக் குடியுரிமைத் மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மசோதாவில் மதரீதியாக மக்களைப் பிரித்து குடியுரிமை வழங்க மத்திய அரசு முயல்கிறது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
இந்தநிலையில் குடியுரிமைத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வட கிழக்கு மாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டம் காரணமாக அஸ்ஸாமின் பல பகுதிகளில் சாலைகளில் டயர்கள் கொளுத்தப்பட்டு போக்குவரத்து தடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 14 மணிநேரம் கடைகள் மூடப்பட்டுள்ளதால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
பதட்டம் அதிகரித்துள்ளதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு இடங்களில் போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் அரசு அலுவலகங்கள், பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.