டெல்லியில் தீ விபத்துக்குள்ளான தொழிற்சாலை கட்டடத்தின் உரிமையாளர் ரெஹான் மீது டெல்லி போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உயிரிழப்பு ஏற்படச் செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய டெல்லியில் பரபரப்பான ராணி ஜான்சி சாலையில் உள்ள அனாஜ் மண்டி என்ற பகுதியில் பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்கு அதிகாலை தீ விபத்து நடந்துள்ளது. தொழிற்சாலைக்குள் பை தயாரிக்கும் இயந்திரம் இருந்த பகுதியில் இருந்தே தீ பரவத் தொடங்கியுள்ளது.
தீ விபத்து ஏற்பட்டபோது 50 பேர் தொழிற்சாலையில் இருந்துள்ளனர். அதிகாலை 5 மணி என்பதால் அனைவருமே ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளனர். அதனால், மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 43 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீ விபத்து சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தோருக்கு மத்திய மாநில அரசுகளின் சார்பில் நிதியுதவியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
(கட்டடத்தின் உரிமையாளர் ரெஹான் - கோப்புப் படம்)
இந்தநிலையில் டெல்லியில் தீ விபத்துக்குள்ளான தொழிற்சாலை கட்டடத்தின் உரிமையாளர் ரெஹான் மீது டெல்லி போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உயிரிழப்பு ஏற்படச் செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.