அயோத்தி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை மறு சீராய்வு செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மேலும் 4 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
நூற்றாண்டு காலமாக நீடித்த அயோத்தி ராமஜென்ம பூமி-பாபர் மசூதி நிலவழக்கில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அது மட்டுமல்லாமல் முஸ்லிம்களுக்கு அயோத்தி நகருக்குள் உரிய, சரியான இடத்தில் மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் நிலம் வழங்கவும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டது.
இந்த தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனுத் தாக்கல் செய்வது என முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இந்த முடிவுக்கு ஜமாத்-எ- உலமா இந்த் ஆதரவு மற்றும் மனுதாரர்கள் சிலரும் முடிவெடுத்துள்ளனர்.
எனினும் உ.பி. மத்திய சன்னி வக்போர்டு, ஷியா வக்போர்டு ஆகியவை மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்ய விருப்பமில்லை என தெரிவித்து விட்டன.
அயோத்தி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி ஜமாயத் உலமா அமைப்பு சார்பில் மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அயோத்தி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை மறு சீராய்வு செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மேலும் 4 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். மவுலானா ஹஸ்புல்லா, முகமது உமர், மவுலானா மகபசூர் ரஹ்மான், மிஷ்பாஹுதீன் ஆகிய 4 பேரும் தனித்தனியாக மறுசீராய்வு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.