மகாராஷ்டிரா முதல்வர் பதவியில் இருந்து விலகிய 2 நாட்களில் தனது அதிகாரபூர்வ இல்லத்தில் இருந்து காலி செய்யும் பணியை முன்னாள் முதல்வரும், பாஜக தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் தொடங்கினார்
மும்பையின் தெற்குப்பகுதியில் உள்ள மலபார் ஹில் பகுதியில் முதல்வராக இருந்தபோது பட்னாவிஸ்க்கு அரசு இல்லம் ஒதுக்கப்பட்டு இருந்தது. வர்ஷா என்று பெயரிடப்பட்ட அந்த இல்லத்தில்தான் கடந்த 5ஆண்டுகளாக பட்னாவிஸ் வசித்து வந்தார். அவரின் பூர்வீக இல்லம் நாக்பூரில் இருக்கிறது.
மகாராஷ்டிராவில் தேர்தலுக்குப்பின் கடந்த ஒருமாதமாக பல்வேறு அரசியல் குழப்பங்கள் நடந்தன. இதில் யார் ஆட்சி அமைப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவியநிலையில், அஜித் பவார் ஆதரவுடன் பாஜகவின் சார்பில் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வரானார். ஆனால், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் பட்னாவிஸ் 4 நாட்களில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதைத்தொடர்ந்து முதல்வருக்காக ஒதுக்கப்பட்டு இருந்த அதிகாரபூர்வ இல்லமான வர்ஷாவில் இருந்து காலி செய்யும் பணியில் இன்று காலைமுதல் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். தனியார் நிறுவனத்தில் இருந்து வந்த ஏராளமான தொழிலாளர்கள் அந்த இல்லத்தில் இருக்கும் பொருட்களை எல்லாம் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த தகவலை போலீஸ் அதிகாரி ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மும்பையில் உள்ள பிரதானப் பகுதியில் புதிய வீட்டை வாடகைக்கு தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு செய்துள்ளார் என்று அந்த வீட்டுக்கு அவர்களின் குடும்பத்தினர் குடியேறப் போகின்றனர் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
நாக்பூர் தென்மேற்கு தொகுதியில் போட்டியிட்டு வென்ற தேவேந்திர பட்னாவிஸ், சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்படுவார் எனத் தெரிகிறது.
முதல்வர் உத்தவ் தாக்கரேயின் பூர்வீக வீடான மாத்தோஸ்ரீ புறநகரான பாந்த்ராவில் உள்ளது. அங்கிருந்து எப்போது அரசின் அதிகாரப்பூர்வ இல்லத்துக்கு முதல்வர் உத்தவ் தாக்கரே வரப் போகிறார் என்ற அறிவிப்பு ஏதும் இல்லை