மகாராஷ்டிராவில் அரசியலமைப்புச் சட்டத்தை பாஜக புறக்கணிக்கிறது. கர்நாடக மாநிலத்தில் என்ன செய்ததோ அதையேதான் மகாராஷ்டிராவிலும் பாஜக நிகழ்த்துகிறது என்று காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்
மகாராஷ்டிராவில் தேர்தல் நடந்து முடிந்த பின் முதல்வர் பதவியைப் பிரித்துக் கொள்வதில் ஏற்பட்ட சிக்கலால், சிவசேனா, பாஜக கூட்டணி முறிந்தது. இதைத் தொடர்ந்து எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால், குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கட்சிகள் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்கும் பணியில் ஈடுபட்டன. ஆனால், யாரும் எதிர்பாராத நிலையில் பாஜகவுக்கு, என்சிபி கட்சியின் தலைவர் அஜித் பவார் ஆதரவு அளித்தார். இதையடுத்து, நேற்று காலை முதல்வராக தேவேந்திர பட்னாவிஸும், துணை முதல்வராக அஜித் பவாரும் பதவி ஏற்றுக்கொண்டனர்.
ஆனால், என்சிபி கட்சியின் தலைவர் சரத் பவார், பாஜகவுக்கு ஆதரவு அளிக்கவில்லை. அஜித் பவாரின் தனிப்பட்ட முடிவு என்று அறிவித்தார். அதுமட்டுமல்லாமல், என்சிபி சட்டப்பேரவைக் குழுத் தலைவர் பதவியிலிருந்தும் அஜித் பவாரை நீக்கினார்.
இவர்கள் இருவருக்கும் ஆளுநர் கோஷியாரி எந்த அடிப்படையில் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார் என்றும், உடனடியாக பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக் கோரி சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளன. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆளுநரிடம் முதல்வர் பட்னாவிஸ், துணை முதல்வர் அஜித் பவார் ஆகியோர் அளித்த எம்எல்ஏக்கள் ஆதரவுக் கடிதங்களை வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ட்விட்டரில் பாஜகவை விமர்சித்து கருத்துத் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைக்க முயல்கிறது. அரசிலமைப்புச் சட்ட அமைப்புகளையும், அரசியலமைப்புச் சட்டத்தையும் புறக்கணித்துள்ளது பாஜக என்று தொலைக்காட்சி செய்திகள் தெரிவிக்கின்றன. கர்நாடக மாநிலத்தில் பாஜக என்ன விளையாட்டு விளையாடியதோ அதையேதான் மகாராஷ்டிராவிலும் பாஜக நிகழ்த்துகிறது
12 ஆயிரம் விவசாயிகள் மகாராஷ்டிராவில் தற்கொலை செய்துள்ளார்கள். ஆனால், அவர்களுக்கு பாஜகவின் பாக்கெட்டில் இருந்து இதுவரை ஒரு உதவியும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், பொதுப்படையாக எம்எல்ஏக்கள் கடத்தப்படுவதைப் பார்க்கத்தான் மக்கள் வாக்களித்துள்ளார்களா? " எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.