இந்தியா

இது அரசியல் துல்லியத் தாக்குதல்: பாஜக மீது உத்தவ் தாக்கரே கடும் சாடல்

செய்திப்பிரிவு

சிவசேனா எம்எல்ஏக்களை பிளவுபடுத்தினால் மகாராஷ்டிரா தூக்கத்தை இழந்து விடும் என அக்கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே எச்சரித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் தேர்தல் நடந்து முடிந்த பின் முதல்வர் பதவியைப் பிரித்துக் கொள்வதில், சிவசேனா, பாஜக இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. இதனால் பாஜகவுடன் 35 ஆண்டுகள் தொடர்ந்த கூட்டணியை சிவசேனா முறித்தது. எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால், குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கட்சிகள் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்கும் பணியில் ஈடுபட்டன. இதற்காக குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்கின. மூன்று கட்சிகளும் சேர்ந்து கூட்டணி அமைத்து மாநிலத்தில் ஆட்சி அமைக்கவும், முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

இந்தசூழலில் திடீர் திருப்பமாக பாஜக,தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்து மாநிலத்தில் ஆட்சி அமைத்தன. முதல்வராக தேவேந்திர பட்னாவிஸும் 2-வது முறையாகவும், துணை முதல்வராக அஜித் பவாரும் பதவி ஏற்றனர்.

ஆனால் இது அஜித் பவாரின் முடிவு, இதில் தேசியவாத காங்கிரஸூக்கு உடன்பாடில்லை என சரத் பவார் அறிவித்தார்.

இந்தநிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாரும், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயும் பிற்பகல் 12:30 மணியளவில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து கூட்டாக பேட்டியளித்தனர். மகாராஷ்டிரா அரசியலில் அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வரும் நிலையில் அப்போது அவர்கள் இருவரும் தங்கள் நிலைப்பாட்டை விளக்கினர்.

அப்போது உத்தவ் தாக்கரே செய்தியாளர்களிடம் கூறியதாவது:

‘‘மகாராஷ்டிராவில் தற்போது நடந்துள்ளது அரசியல் துல்லியத் தாக்குதல். இதற்கு மகாராஷ்டிர மக்கள் பழிக்கு பழி தீர்ப்பார்கள். சிவசேனா எம்எல்ஏக்களை பிளவுபடுத்தினால் மகாராஷ்டிரா தூக்கத்தை இழந்து விடும். சரத் பவாரும், நானும் இணைந்து செயல்படுவோம்.

மகாராஷ்டிர அரசியல் குழப்பத்தை பயன்படுத்தி மீண்டும் தேர்தல் வராது என்று நம்பலாம். சிலர் பெவிக்கால் (பட்னாவிஸ்) போல் இருக்கையில் ஒட்டிக்கொள்ளவே விரும்புகின்றனர். ’’ எனக் கூறினார்.

SCROLL FOR NEXT