மகாராஷ்டிராவில் பாஜகவைச் சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் 2-வது முறையாக முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டதற்கு பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் தேர்தல் நடந்து முடிந்த பின் முதல்வர் பதவியைப் பிரித்துக் கொள்வதில், சிவசேனா, பாஜக இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. இதனால் பாஜகவுடன் 35 ஆண்டுகள் தொடர்ந்த கூட்டணியை சிவசேனா முறித்தது.எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால், குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கட்சிகள் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்தன. இதற்காக குறைந்த செயல் திட்டத்தைத் தீட்டி ஆட்சி அமைக்கும் பணியில் ஈடுபட்டன. மூன்று கட்சிகளும் சேர்ந்து கூட்டணி அமைத்து மாநிலத்தில் ஆட்சி அமைக்க ஒப்புக்கொண்ட நிலையில் நேற்று மும்பையில் கூடி ஆலோசனை நடத்தின.
இந்த 3 கட்சிகளும் ஆட்சி அமைக்கும் இறுதிக்கட்ட நிலையில் இருந்தன. இதனால் இன்று 3 கட்சிகளும் சேர்ந்து ஆட்சி அமைக்க இன்று ஆளுநரிடம் கோருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.இந்த கூட்டத்துக்குபின் என்சிபி தலைவர் சரத் பவார் நேற்று இரவு பேசுகையில், “ சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக வருவார். அதற்கு காங்கிரஸ், என்சிபி சம்மதித்துவிட்டோம்” எனத் தெரிவி்த்திருந்தார்.
இந்நிலையில் திடீர் அரசியல் திருப்பமாக பாஜக,தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்து மாநிலத்தில் ஆட்சி் அமைத்தன. முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் 2-வது முறையாகவும், துணை முதல்வராக அஜித் பவாரும் பதவி ஏற்றனர்.
2-வது முறையாக முதல்வராக பதவிஏற்ற தேவேந்திர பட்னாவிஸ்க்கு பிரதமர் மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் பிரதமர் மோடி கூறுகையில், “முதல்வராக பதவிஏற்ற தேவேந்திர பட்னாவிஸ்க்கும், துணை முதல்வராக பதவிஏற்ற அஜித் பவாருக்கும் எனது வாழ்த்துக்கள். மகாராஷ்டிாவின் ஒளியமயமான எதிர்காலத்துக்கு இவர்கள் சேர்ந்து உழைப்பார்கள் உறுதியாக நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவும் ட்விட்டரில் தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்வராக பதவிஏற்ற அஜித் பவாருக்கும் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்