மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சிமைக்க காங்கிரஸ் ஆதரவு தந்தால் இறுதியால் பாஜகவே பலன் சூழல் ஏற்பட்டு விடும் என காங்கிரஸ் மூத்த தலைவர் சஞ்சய் நிருபம் எச்சரித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் தேர்தல் நடந்து முடிந்த பின் முதல்வர் பதவியைப் பிரித்துக் கொள்வதில், சிவசேனா, பாஜக இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. இதனால் பாஜகவுடன் 35 ஆண்டுகள் தொடர்ந்த கூட்டணியை சிவசேனா முறித்தது.
எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால், குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கட்சிகள் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. இதற்காக குறைந்த செயல் திட்டத்தைத் தீட்டி ஆட்சி அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
மூன்று கட்சிகளும் சேர்ந்து கூட்டணி அமைத்து மாநிலத்தில் ஆட்சி அமைக்க ஒப்புக்கொண்ட நிலையில் இன்று மும்பையில் கூடி ஆலோசனை நடத்தின. பின்னர் உத்தவ் தாக்கரே தலைமையில் ஆட்சியமைக்க ஆதரவளிப்பது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சஞ்சய் நிருபம் கூறியதாவது:
‘‘பாஜக ஆட்சியில் அமராமல் தடுப்பதற்காக எங்கள் தலைவர்கள் சிவசேனாவுடன் கைகோர்க்க விரும்புகிறார்கள். ஆனால் இந்த மூன்று கட்சிகளும் சேர்ந்து அரசு அமைப்பது எப்படி சாத்தியம்.
பாஜக ஆட்சியமைத்தாலும் சரி, மற்ற எந்த கட்சி அமைத்தாலும் சரி அதை பற்றி காங்கிரஸ் கவலைப்படாமல் கொள்கையில் உறுதியுடன் இருக்க வேண்டும். அதை மறந்து சிவசேனாவுடன் கூட்டணி அமைத்தால் இறுதியாக பாஜகவே பலன் பெறும்’’ எனக் கூறினார்.