இந்தியா

கடந்த 50 ஆண்டுகளில் இந்தியக் கடல் மட்டம் 8.5 செமீ அதிகரிப்பு: மத்திய அமைச்சர் அதிர்ச்சித் தகவல்

பிடிஐ

கடந்த 50 ஆண்டுகளில் இந்திய கடல்நீர் மட்டம் 8.5 செமீ அதிகரித்துள்ளது என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பாபுல் சுப்ரியோ மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில் தெரிவித்தார்.

புவிவெப்பமடைதலால் வெப்பநிலை அதிகரித்து வருகிறது இதனால் இந்திய கடற்கரை நகரங்கள் மூழ்கும் ஆபத்து உள்ளதா என்ற கேள்விக்கு மத்திய அமைச்சர் பதிலளித்தார். ஆனாலும் பருவநிலை மாற்றங்களினால் கடல்நீர் மட்டம் அதிகரிக்கிறதா என்பதை நிச்சயமாகக் கூற முடியவில்லை என்றார்.

“சராசரியாக கடல் நீர்மட்டம் இந்தியாவில் ஆண்டுக்கு 1.70 மிமீ உயர்கிறது. எனவே கடந்த 50 ஆண்டுகளில் கடல்நீர் மட்டம் 8.5 செமீ அதிகரித்துள்ளது. மேலும் செயற்கைக் கோள் கணக்கீட்டு மாதிரியில் வட இந்தியக் கடல் நீர்மட்டத்திலும் மாறுபாடு தெரிகிறது. 2003-13 காலக்கட்டத்தில் ஆண்டுக்கு 6.1 மிமீ கடல் மட்டம் அதிகரித்துள்ளது” என்றார் மத்திய அமைச்சர்.

அவர் மேலும் கூறும்போது, “ஆனால் கடல் மட்டம் அதிகரிப்பினால் கடற்கரை நகரங்கள், தாழ்வான பகுதிகள் மூழ்கும் என்பது சராசரி கடல் மட்டத்திலிருந்து எவ்வளவு உயர்ந்துள்ளது என்பதைப் பொறுத்தது. ஏனெனில் இப்பகுதிகளுக்கான நீண்டகால கடல் அரிப்பு புள்ளிவிவரங்கள் இல்லை. அதனால்தான் கடல்மட்ட உயர்வை வானிலை மாற்றத்திற்கு மட்டுமே உறுதியாகக் குணாம்சப்படுத்த முடியவில்லை.

உதாரணமாக டையமண்ட் துறைமுகத்தில் கடல் மட்டம் அதிகரிப்புக்கான காரணம் அங்கு கடல் அரிப்பு அதிகம். இதுதான் கண்ட்லா, ஹால்டியா, போர்ட் பிளேர் ஆகிய்வற்றுக்கும் பொருந்தும்” என்றார் மத்திய அமைச்சர்.

SCROLL FOR NEXT