இந்தியா

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்; 17-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம்: சபாநாயகர் அறிவிப்பு

செய்திப்பிரிவு

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ம்- தேதி தொடங்கும் நிலையில் 17-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு அதன் தலைவர் மத்திய அமைச்சர் ‌ராஜ்நாத் சிங் தலைமையில் கூடி, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை நவம்பர் மாதம் 18-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 13-ஆம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டது.

இந்த கூட்டத் தொடரில் தேசிய குடிமக்கள் பதிவேடு, காஷ்மீர் விவகாரம் உள்ளிட்ட பல முக்கியப் பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. அதேசமயம் குடியுரிமை மசோதாவில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதுமட்டுமின்றி மின்னணு சிகரெட் தடைச் சட்டம், கார்பரேட் வரி குறைப்பு திருத்த மசோதா உள்ளிட்ட மிக முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் முடிவைத் தொடர்ந்து மத்திய அமைச்சரவையில் இருந்து சிவசேனா விலகியுள்ளது. இதனால் குளிர்காலக் கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகளுடன் கைகோத்து சிவசேனா பிரச்சினைகளை எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பரபரப்பான சூழலில் நாடாளுமன்றக் கூட்டத்தொடரை அமைதியாக நடத்துவது தொடர்பாக ஆலோசிப்பதற்காக அனைத்துக் கட்சிக்கூட்டம் வரும் 17-ம் தேதி நடைபெறுகிறது. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.

கூட்டத்தொடரில் விவாதிக்கப்படவுள்ள பிரச்சினைகள், திட்டங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

SCROLL FOR NEXT