திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் கடந்த மே மாதம் 7-ம் தேதி செம்மரம் கடத்தியதாக திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 20 கூலி தொழிலார்களை ஆந்திர அதிரடி போலீஸார் சுட்டுக் கொன்றனர். என்கவுன்ட்டர் நடந்த சீகடிகல கோனா பகுதியில் நேற்று முன்தினம் இரவு சுமார் 9 மணியளவில் ஆயுதப்படை போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அந்த இடத்தில் 50க்கும் மேற்பட்டவர்கள் செம்மரங்களை வெட்டி கடத்த முயன்றதாகக் கூறப்படுகிறது.அவர்களை போலீஸார் சரணடையும்படி வலியுறுத்தி உள்ளனர்.
இதனால் ஒரு கட்டத்தில் போலீஸார் மீது கூலி ஆட்கள், கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து போலீஸார் 2 ரவுண்டு துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், கடத்தல்காரர்கள் அங்கிருந்து தப்பி தலைமறைவானதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
கடத்தப்பட இருந்த ரூ.35 லட்சம் மதிப்புள்ள செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.