லோதி
கர்தார்பூர் வழித்தடம் இன்று திறக்கப்படும் நிலையில் எல்லையருகே லோதியில் உள்ள குருத்வாராவில் பிரதமர் மோடி இன்று வழிபாடு நடத்தினார்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அமைந்துள்ள பகுதி கர்தார்பூர். சீக்கிய மதத்தை தோற்றுவித்தவரான குருநானக் தேவ், தமது இறுதி காலத்தை இங்கு கழித்ததாக வரலாற்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால், அவரது நினைவாக கர்தார்பூரில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ‘தர்பார் சாஹிப்' என்ற பெயரில் குருத்வாரா அமைக்கப்பட்டது.
இந்த குருத்வாராவுக்கு செல்வது என்பது சீக்கியர்களின் கடமைகளில் ஒன்றாக வரையறுக்கப்பட்டிருக்கிறது. எனினும், பாகிஸ்தானுக்கு விசா வாங்கி செல்வதில் பல்வேறு சிரமங்கள் இருந்ததால் கர்தார்பூர் குருத்வாராவுக்கும் இடையே வழித்தடம் அமைக்க இருதரப்பிலும் முடிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே கர்தார்பூர் வழித்தடம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. கர்தார்பூர் வழித்தடத்தை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு இந்திய அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்களுக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது.
இந்திய பகுதியில் கர்தார்பூர் வழிதடத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். குர்தாஸ்பூர் தேராபாபா நானா சாஹிப் குருத்வாரா அருகே கர்தார்பூர் வழித்தடத்தில் சர்வதேச எல்லையில் உள்ள சோதனைச் சாவடியை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
இதற்காக பஞ்சாப் மாநில எல்லையில் உள்ள சுல்தான்பூர் லோதியில் அமைந்துள்ள பெர்சாஹிப் குருத்வாராவில் வழிபாடு நடத்தினார்.
முன்னதாக சுல்தான்பூர் வந்த பிரதமர் மோடியை பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் வரவேற்றார்.