ஹைதராபாத்
73 லட்சம் ரூபாய்க்கு வீட்டுக்கு ஜன்னல், கதவுகளை அரசுப்பணத்தில் இருந்து அமைக்கிறார் என்று ஆந்திர முதல்வர் ஒய்எஸ்ஆர் ஜெகன்மோகன் ரெட்டி மீது தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார்.
ஜெகன்மோகன் ரெட்டி முதல்வர் பதவிக்கு வந்தபின், முந்தைய அரசின் திட்டங்களின் பெயர்களை எல்லாம் மாற்றி அறிவிக்கிறார். தனது தந்தையின் பெயரை வைக்க முன்னுரிமை அளிக்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியும், தெலங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவும் அவ்வப்போது பரஸ்பரம் கடுமையான குற்றச்சாட்டுகளைக் கூறுவதும், விமர்சிப்பதும் தொடர்ந்து வருகிறது.அந்த வகையில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி குண்டூரில் தான் கட்டிவரும் வீட்டுக்கு ரூ.73 லட்சத்துக்குக் கதவு, ஜன்னல் அமைக்க உள்ளார். இதற்கு அரசுப் பணத்தைத்தான் செலவு செய்கிறார் என்று சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் சந்திரபாபு நாயுடு பதிவிட்ட கருத்தில், " ஒய்எஸ்ஆர் ஜெகன்மோகன் ரெட்டி தான் கட்டிவரும் வீட்டுக்கு ரூ.73 லட்சத்தில் ஜன்னல், கதவுகளை அமைக்க, அரசு நிதி ஒதுக்கியுள்ளது. மக்களின் பணத்தை ஜெகன்மோகன் தாராளமாகச் செலவழிக்கிறார். கடந்த 5 மாதங்களாக ஆந்திர அரசு நிர்வாகம் தவறாக வழிநடத்தப்பட்டு, நிதிச்சிக்கலில் சிக்கி இருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்
சந்திரபாபு நாயுடுவின் மகன் நரா லோக்கேஷ் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், " ஜெகன்மோகன் ரெட்டி தனது சகாக்களுக்கு ஊதியமாக மாதம் ஒரு லட்சம் ரூபாய் வழங்குகிறார்" எனக் குற்றம்சாட்டியுள்ளார்
கடந்த மே மாதம் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சிக்கு வந்தபின் அவரின் சொந்த ஊரான குண்டூர் தேடாபள்ளி கிராமத்துக்கு சாலை அமைக்க ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டது. மின்வசதி அமைக்க ரூ.3.6 கோடி ஒதுக்கப்பட்டது.
ஹெலிகாப்டர்கள் வந்துஇறங்க, ஹெலிபேட் அமைக்கவும், பாதுகாப்பு செலவுக்காகவும் ரூ.1.89 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும், வீட்டை விரிவுபடுத்திக் கட்டவும், சுற்றுச்சுவர் எழுப்பவும் ரூ.3.25 கோடி செலவிடப்பட்டது.இதுதவிர்த்து பிரஜா தர்பார் என்று மக்களைச் சந்திக்க முதல்வரின் வீட்டுக்கு அருகே ரூ.82 லட்சம் மதிப்பில் ஒரு அரங்கு அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
ஏஎன்ஐ