அயோத்தி
அயோத்தி தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில் சமூக நல்லணிக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் நபர்களை கண்டறிய பைசாபாத் மாவட்டத்தில் 16 ஆயிரம் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தின் உரிமை தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.அப்துல் நசீர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.
இதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் அயோத்தி வழக்கில் நாள்தோறும் விசாரணை நடத்தப்பட்டு இருதரப்பு வாதங்கள் கடந்த 16-ம் தேதி நிறைவடைந்தன.
முன்னதாக அயோத்தி ராமஜென்ம பூமி- பாபர் மசூதி நில விவகாரத்தில் சுமுகத் தீர்வு காண நியமிக்கப்பட்ட 3 பேர் கொண்ட சமரசக் குழு கடந்த மாதம் 16-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் ரகசிய அறிக்கையை தாக்கல் செய்தது.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் வரும் 17-ம் தேதி ஓய்வு பெறுகிறார். அதற்கு முன்பாக தீர்ப்பு வெளியாகும் என்று உச்ச நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அயோத்தி வழக்கு தீர்ப்பையொட்டி உத்தரப் பிரதேசத்தின் பல நகரங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட அயோத்தியில் ஏற்கெனவே 144 தடை உத்தரவு அமல் செய்யப்பட்டிருக்கிறது.
அயோத்தி விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் பொதுமக்கள் சமூக வலைதளங்களில் தகவல்களைப் பகிரும்போது பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என உத்தரப் பிரதேச அரசு வலியுறுத்தியுள்ளது.
இந்தநிலையில் அயோத்தி தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில் அமைதி பணியில் ஈடுபடவும், சமூக நல்லணிக்கத்தை கெடுக்கும் வகையில் செயல்படும் நபர்களை கண்டறிந்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கவும் அயோத்தி நகர் மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் 16 ஆயிரம் தன்னார்வலர்களை உத்தர பிரதேச காவல்துறை நியமித்துள்ளது.
மாவட்டம் முழுவதும் 1600 பகுதிகள் கண்டறியப்பட்டு அங்கு இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் காவல்துறையினருடன் இணைந்து அமைதிப்பணியில் ஈடுபடவுள்ளனர்.
இதுமட்டுமின்றி சமூகவலைதளங்களை கண்காணிக்கவும் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வாட்ஸ் ஆப் குழுக்கள் உட்பட பல்வேறு சமூகவலைதளங்களையும் கண்காணிக்கவுள்ளனர். மத விவகாரங்கள் தொடர்பாக அவதூறாக தகவல்களைப் பகிர்பவர்களை கண்டறிந்து தகவல் அளிக்கவுள்ளனர்.