இந்தியா

வாட்ஸ் ஆப் தகவல்கள் பாதுகாக்கப்படும்: மத்திய அரசு உறுதி

செய்திப்பிரிவு

புதுடெல்லி

இந்தியாவில் பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்ட சிலரின் வாட்ஸ் ஆப் தகவல்களை இஸ்ரேல் உளவு நிறுவனம் உளவு பார்த்ததாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இந்திய குடிமக்களின் தனிப்பட்ட ரகசியங்களை பாதுகாக்க அரசு உறுதி கொண்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

நாடு முழுவதும் முக்கிய பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்ட சிலரின் வாட்ஸ் ஆப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்தநிலையில் கலிபோர்னியா பெடரல் நீதிமன்றத்தில் வாட்ஸ் ஆப் நிறுவனம் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளது. இஸ்ரேலைச் சேர்ந்த சைபர் உளவு நிறுவனமான என்எஸ்ஓ 1,400 பேரின் மொபைல் போன் ஹேக் செய்யப்பட்டு அவர்களது வாட்ஸ் ஆப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்டதாகவும், தெரிவித்துள்ளது.

இதில் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் சில முக்கிய நபர்களின் வாட்ஸ் ஆப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

பிரபல சமூக ஆர்வலர்கள் வாட்ஸ்ஆப் தகவல்களும் திருடப்பட்டுள்ளதாகவும், யார் யார் போன் எண்கள் கண்காணிக்கப்பட்டது என்பதும் உறுதிப்படுத்தப்பட வில்லை எனவும் வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னதாக சத்தீஸ்கரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பெல்லாபாட்டியாவின் வழக்கறிஞர் நிகல்சிங் மத்திய அரசுக்கு அனுப்பியுள்ள புகாரில் தனது மொபைல் போன் வாட்ஸ் ஆப் தகவல்கள் உளவு பார்க்கப்படுவதாக கூறியிருந்தார். மத்திய அரசும், வாட்ஸ்ஆப் நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டுள்ளது.
இதுகுறித்து உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது:

நாடு முழுவதும் முக்கிய பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்ட சிலரின் வாட்ஸ் ஆப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இதுபற்றி மக்கள் கவலைப்பட வேண்டாம். இந்திய மக்களின் உரிமை சட்டபூர்வமாக பாதுகாக்கப்படும். அதற்கு தேவையான நடவடிக்கை கண்டிப்பாக எடுக்கப்படும். குடிமக்களின் உரிமைகள் சட்டப்படி பாதுகாப்பதை அரசு உறுதி செய்யும்.
இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT