இந்தியா

ஆதித்ய தாக்கரே அல்ல; சிவசேனா திடீர் முடிவு: சட்டப்பேரவை கட்சித் தலைவராக ஷிண்டே தேர்வு

செய்திப்பிரிவு

மும்பை
மகாராஷ்டிராவில் சிவசேனா சட்டட்பேரவை கட்சித் தலைவராக ஏக்நாத் ஷிண்டே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிராவில் உள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் கடந்த 21-ம் தேதி தேர்தலும் 24-ம் தேதி வாக்குகளும் எண்ணப்பட்டன. இதில் சிவசேனா கட்சிக்கு 56 இடங்களும், பாஜகவுக்கு 105 இடங்களும் கிடைத்தன.

ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவை. ஆனால், பாஜகவிடம் தற்போது 105 இடங்கள் மட்டுமே இருப்பதால் சிவசேனா ஆதரவோடுதான் ஆட்சி அமைக்க வேண்டிய நிலையில் இருக்கிறது. ஆனால் ஆட்சியில் சமபங்கு வேண்டும் என சிவசேனா வலியுறுத்துகிறது. இதனால் மகாராஷ்டிராவில் புதிய அரசு அமைவதில் சிக்கல் நீடித்து வருகிறது.

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் சிவசேனா தலைவர் உத்தவர் தாக்கரேயின் மகன் ஆதித்ய தாக்கரே வொர்லி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். கூட்டணியில் ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கு முடிவு காண, சிவசேனாவுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படலாம் எனவும், ஹரியாணாவில் துஷ்யந்த் சவுதாலா துணை முதல்வரானது போல, மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்ய தாக்கரே அல்லது அந்த கட்சியைச் சேர்ந்த வேறு ஒருவர் துணை முதல்வராக்கப்படலாம் என தகவல் வெளியாகியது.

இந்தநிலையில் மகாராஷ்டிர மாநில சிவசேனா எம்எல்ஏக்கள் கூட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிவசேனா சட்டப்பேரவை கட்சித் தலைவராக ஏக்னாத் ஷிண்டே தேர்வு செய்யப்பட்டார். ஆதித்ய தாக்கரே துணை முதல்வராக பதவி ஏற்க ஏதுவாக அவர் சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்படலாம் என தகவல் வெளியாகி இருந்தது.

ஆனால் அவர் தேர்வு செய்யப்படவில்லை. ஆதித்ய தாக்கரேவுக்கு 29 வயது மட்டுமே ஆவதாலும், முதன்முறை என்பதால் சட்டப்பேரவை நடைமுறைகளை அவர் கற்றுக்கொள்ள ஓராண்டு கால அவகாசம் வழங்க உத்தவ் தாக்கரே முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

எனவே அமைச்சரவையிலும் அவர் பங்கேற்க வாய்ப்பில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே துணை முதல்வர் பதவிக்கு பதிலாக மகாராஷ்டிர மாநில அமைச்சரவையில் கூடுதலாக 2 அமைச்சர் பதவிகள் சிவசேனா தரப்புக்கு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT