இந்தியா

ஹரியாணாவில் பாஜக ஆட்சி அமைக்க ஆதரவு: லோஹித் கட்சி அறிவிப்பு

செய்திப்பிரிவு

ரோதக்

ஹரியாணா பாஜக ஆட்சி அமைக்க ஆதரவளிக்கப்போவதாக ஹரியாணா லோஹித் கட்சித் எம்எல்ஏ கோபால் கண்டா அறிவித்துள்ளார்.

ஹரியாணாவில் கடந்த 21-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. ஹரியாணா தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், இந்திய தேசிய லோக் தளம் ஆகிய கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. பாஜகவும் காங்கிரஸும் 90 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தின.

இந்திய தேசிய லோக் தளம் 81 தொகுதிகளிலும் மீதமுள்ள தொகுதிகளில் அதன் கூட்டணி கட்சி யான அகாலி தளமும் போட்டியிட்டன. ஆம் ஆத்மி 46, பகுஜன் சமாஜ் 87, ஸ்வராஜ் இண்டியா 27 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தின.

ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. பெரும்பான்மைக்கு 46 இடங்கள் தேவை என்ற நிலையில் ஆளும் பாஜக 40 இடங்களையும், காங்கிரஸ் 31 இடங்களையும் வென்றன. ஜனநாயக ஜனதா கட்சி 10 இடங்களில் வெற்றி பெற்றது.

ஹரியாணா லோஹித் கட்சி மற்றும் லோக்தளம் தலா ஓரிடத்திலும், சுயேச்சைகள் 7 தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர். இதில் 5 சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவுடன் ஆட்சியமைக்க பாஜக முயன்று வருகிறது.
சுயேச்சை எம்எல்ஏக்களில் 5 பேர் பாஜகவில் போட்டியிட சீட் வழங்கப்படாததால் சுயேச்சையாக போட்டியிட்டு வென்றவர்கள் ஆவர். அவர்கள் பாஜகவை ஆதரிப்பதாக கூறியுள்ளனர்.
அம்மாநில முதல்வர் மனோகர்லால் கட்டார் இன்று காலை டெல்லியில் பாஜக செயல் தலைவர் ஜே.பி. நட்டாவை சந்தித்து பேசினார். இந்தநிலையில், ஹரியாணாவில் பாஜக அரசு அமைய ஆதரவளிக்கப்போவதாக ஹரியாணா லோஹித் கட்சித் எம்எல்ஏ கோபால் கண்டா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் ‘‘ஹரியாணா தேர்தலில் வென்ற சுயேச்சை எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு ஆதரவளிக்க ஏற்கெனவே முடிவு செய்துள்ளனர். எங்கள் கட்சியும் பாஜக ஆட்சி அமைக்கவே விரும்புகிறது. பாஜக ஆட்சி அமைய நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவோம்’’ எனக் கூறினார்.

SCROLL FOR NEXT