ஒடிசா
இந்திய அரசியல் சாசனத்தின் மீது ஆணையிட்டு திருமணம் செய்து கொண்ட ஒடிசா மாநில ஜோடி பற்றிய செய்தி வைரலாகி வருகிறது.
பிப்லாம் குமார், அனிதா என்ற அந்த இளம் ஜோடியின் திருமணம் அண்மையில் ஒடிசா மாநிலம் பெஹ்ராம்பூரில் நடந்தது.
திருமண விழாவில், இந்திய அரசியல் சாசனத்தின் மீது தம்பதி ஆணையிட்டு இல்லறம் ஏற்றனர். மேலும், ரத்ததான முகாமும் நடத்தினர். அதில் புதுமணத் தம்பதியும் விழாவிற்கு வந்திருந்தவர்களும் பங்கேற்றனர்.
இது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த மணமகன், "ஆண்கள் வரதட்சனையைத் தவிர்க்க வேண்டும். எளிமையாக, சூழல் நட்பு முறையில் திருமணம் செய்துகொள்ள வேண்டும். அதனால்தான் எங்களின் திருமணத்துக்கு நாங்கள் பட்டாசு வெடிக்கவில்லை. வாத்தியங்களை இசைக்கவில்லை. ரத்த தானம் செய்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்" என்றார். மணமகன் குமார் மருந்து நிறுவனத்தில் வேலை செய்கிறார்.
மணப்பெண் அனிதா நர்ஸாகப் பணிபுரிகிறார். அவர் கூறும்போது, "நான் எனது வாழ்வின் புதிய அத்தியாயத்தை ரத்த தானத்துடன் துவக்குவதில் எனக்கு மகிழ்ச்சி. எங்கள் திருமண நிகழ்வில் கணவரை இழந்த பெண்களும் கலந்து கொண்டனர். இத்தகைய திருமண நிகழ்வுகள் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என நாங்கள் நினைக்கிறோம்" என்றார்.
-ஏஎன்ஐ