திஹார் சிறையில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் 
இந்தியா

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு:  திஹார் சிறையில் சிதம்பரத்திடம் அமலாக்கப்பிரிவு விசாரணை 

செய்திப்பிரிவு

புதுடெல்லி

டெல்லி நீதிமன்றம் வழங்கிய அனுமதியைத் தொடர்ந்து ஐஎன்எக்ஸ் மீடியா சட்டவிரோதப் பணப் பரிமாற்றப் புகார் தொடர்பாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் இன்று காலை திஹார் சிறைக்குச் சென்று சிதம்பரத்திடம் விசாரணை நடத்தினர்.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி சிபிஐ அமைப்பால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குகர் முன் நடந்து வருகிறது.

இந்த வழக்கில் சிபிஐ விசாரணை முடிந்து அவர் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார். அவர் தற்போது திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் சிதம்பரத்தை அக்டோபர் 17-ம் தேதி வரை சிறையில் அடைக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் நடந்த விவகாரத்தை அமலாக்கப் பிரிவும் விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் சிதம்பரத்தைக் கைது செய்து காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கப் பிரிவு முயன்று வருகிறது.

இந்த வழக்கில் நேற்று உத்தரவு பிறப்பித்த டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குகர் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் திஹார் சிறைக்குச் சென்று விசாரணை நடத்தலாம். தேவைப்பட்டால் அவரைக் கைது செய்யலாம் எனத் தெரிவித்தார்.

இதன்படி அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் திஹார் சிறைக்கு இன்று சென்றனர். ப.சிதம்பரத்திடம் அவர்கள் விசாரணை நடத்தினர். அப்போது ஐஎன்எக்ஸ் மீடியா சட்டவிரோதப் பணப் பரிமாற்ற விவகாரம் தொடர்பாக பல்வேறு விவரங்களை அவர்கள் கேட்டதாகத் தெரிகிறது.

SCROLL FOR NEXT