இந்தியா

சிதம்பரத்தை விசாரிக்கலாம்; கைது செய்யலாம்: அமலாக்கப்பிரிவுக்கு நீதிமன்றம் அனுமதி

செய்திப்பிரிவு

புதுடெல்லி
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் திஹார் சிறைக்கு சென்று சிதம்பரத்திடம் நாளை விசாரணை நடத்தவும், தேவைப்பட்டால் அவரை கைது செய்யவும் அமலாக்கப்பிரிவுக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி சிபிஐ அமைப்பால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குகர் முன் நடந்து வருகிறது.

இந்த வழக்கில் சிபிஐ விசாரணை முடிந்து அவர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். அவர் தற்போது திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் சிதம்பரத்தை அக்டோபர் 17-ம் தேதி வரை சிறையில் அடைக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தநிலையில் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்த விவகாரத்தை அமலாக்கப்பிரிவும் விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் சிதம்பரத்தை கைது செய்து காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கப்பிரிவு முயன்று வருகிறது.

டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குஹர் முன்பு இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களும் நேற்று முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து இன்று உத்தரவு பிறப்பிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.

இதையடுத்து இந்த வழக்கில் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். அதன்படி இந்த வழக்கில் திஹார் சிறைக்கு சென்று நாளை விசாரணை நடத்தலாம், தேவைப்பட்டால் அவரை கைது செய்யலாம் என நீதிபதி தெரிவித்தார்.

முன்னதாக அவரை நீதிமன்ற வளாகத்தில் ஓரிடத்தில் வைத்து விசாரணை நடத்த அனுமதி கோரப்பட்டது. ஆனால் சிறைக்கு சென்று விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

SCROLL FOR NEXT