பிரதிநிதித்துவப்படம் 
இந்தியா

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு; சிதம்பரம் ஜாமீன் மனுவுக்கு பதில் அளிக்க சிபிஐக்கு நோட்டீஸ்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

புதுடெல்லி

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் அதுகுறித்துப் பதில் அளிக்க சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்ப இன்று உத்தரவிட்டது.

வழக்கின் அடுத்த விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் ஆர்.பானுமதி, ரிஷிகேஷ் ராய் உத்தரவிட்டனர்.

ஐஎன்எக்ஸ் மீடியோ முறைகேடு வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் சிபிஐ அமைப்பால் கைது செய்யப்பட்டார். சிபிஐ காவல் முடிந்த நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நீதிமன்றக் காவலில் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஜாமீன் கோரி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவும், டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு கடந்த 30-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், "பிணை என்பது விதி, சிறை என்பது விதிவிலக்கு. கைது செய்திருப்பதும், காவலில் வைத்திருப்பதும் தன்னை அவமானப்படுத்தும் நோக்கில் இருக்கிறது. நீதிமன்றக் காவலில் நீண்டகாலம் வைத்திருப்பதை தண்டனையாக அரசுத் தரப்பு நினைக்கிறது, நீண்டகாலம் நீதிமன்றக் காவலில் வைத்திருப்பது சரியானதா என்பதை ஆய்வு செய்து ஜாமீன் வழங்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.பானுமதி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ தரப்பில் சொலிட்டர்ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார். சிதம்பரம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜரானார்.

ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கும் விவகாரத்தில் சிபிஐ வரும் 15-ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று கூறிய நீதிபதிகள் வழக்கை 15-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

பிடிஐ

SCROLL FOR NEXT