புதுடெல்லி
சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட கர்நாடக மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே. சிவக்குமாரை அக்டோபர் 15-ம் தேதி வரை திஹார் சிறையில் அடைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
கர்நாடக மாநிலத்தின் கனகபுரா தொகுதி எம்எல்ஏ டி.கே. சிவக்குமார். முந்தைய காங்கிரஸ், ஜேடிஎஸ் கூட்டணி ஆட்சியில் துணை முதல்வராக இருந்தார். சட்டவிரோதப் பணப் பரிமாற்றங்கள் செய்ததாக டி.கே. சிவக்குமார், ஹனுமந்தப்பா, கர்நாடக பவனில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் ஆகியோர் மீது அமலாக்கப் பிரிவு குற்றம் சாட்டி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வழக்குப் பதிவு செய்தது.
இது தொடர்பாக 3 முறை சிவக்குமாரிடம் அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்தியது. கடந்த மாதம் 3-ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார்.
சிவக்குமாரை டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் முன் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் ஆஜர்படுத்தி திஹார் சிறையில் அடைத்தனர். அவரை அமலாக்கத்துறையினர் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையின்போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல்நிலை சீரானதை அடுத்து அவரை போலீசார் திஹார் சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து சிவக்குமார் சார்பில் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை கடந்த 25-ம் தேதி விசாரித்த நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்து விட்டது.
இந்தநிலையில் டி.கே.சிவகுமாரின் காவல் முடிவந்ததை தொடர்ந்து அவர் இன்று சிறப்பு நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அமலாக்கப்பிரிவு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சிவக்குமார் மருத்வமனையில் அனுமதிக்கப்பட்டதால் அவரிடம் போதுமான விசாரணை நடைபெறவில்லை. எனவே அவரை விசாரிக்க அனுமதி வேண்டும் எனக் கோரினார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி அஜய் குமார், சிவக்குமாரின் காவலை மேலும் 14 நாட்களுக்கு நீட்டித்து உத்தரவு பிறபித்தார். அக்டோபர் 15-ம் தேதி வரை திஹார் சிறையில் அவரை அடைக்க உத்தரவிட்ட நீதிபதி, அவரிடம் அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்தவும் அனுமதி வழங்கினர். அக்டோபர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் திஹார் சிறை சென்று அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சிவக்குமாரிடம் விசாரணை நடத்தவும் நீதிபதி அனுமதி வழங்கினார்.