புதுடெல்லி,
கடந்த 2014-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வேட்பு மனுவில் இரு கிரிமினல் வழக்குகளை மறைத்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
இந்த வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் பிறப்பித்திருந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.
கடந்த 2014-ம் ஆண்டு மகராஷ்டிரா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தது. இதில் பாஜக முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட தேவேந்திர பட்நாவிஸ் தனது பிரமாணப் பத்திரத்திலும், வேட்புமனுவிலும் தன் மீதுள்ள இரு கிரிமினல் வழக்குகளைக் குறிப்பிடாமல் இருந்தார்.
இது தொடர்பாக சதீஸ் உகே என்பவர் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
கடந்த 1996 மற்றும் 1998-ம் ஆண்டுகளில் இரு மோசடி, கிரிமினல் வழக்குகள் தேவேந்திர பட்நாவிஸ் பதிவு செய்யப்பட்டு இருந்ததை வேட்புமனுவில் மறைத்துவிட்டார். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தை மீறியுள்ளதால் அவர் வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி மனுவில் தெரிவித்திருந்தார்.
ஆனால், இந்த வழக்கில் அப்போது உள்ளூர் நீதிமன்றம் இந்தப் புகாரை விசாரணைக்கு எடுத்துக்கொண்டதே தவிர குற்றச்சாட்டு ஏதும் பட்நாவிஸ் மீது பதிவு செய்யப்படவில்லை.
இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்திலும் பட்நாவிஸ் மீது வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வேட்புமனுவில் தன்மீது நிலுவையில் இருக்கும் வழக்குகளை வேட்பாளர் குறிப்பிடத் தேவையில்லை, குற்றச்சாட்டு பதிவு செய்த வழக்குகள் மட்டும் குறிப்பிட்டால் போதுமானது எனத் தெரிவித்து தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து சதீஸ் உகே உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து பட்நாவிஸ் மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரினார். இந்த மனு மீதான விசாரணை கடந்த ஜூலை மாதம் முடிந்த நிலையில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் மீதான அமர்வு இன்று தீர்ப்பளித்தது.
அந்தத் தீர்ப்பில், "மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்கிறோம். தேவேந்திர பட்நாவிஸ் தன் மீது நிலுவையில் இருக்கும் இரு கிரிமினல் வழக்குகளின் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்" என உத்தரவிட்டது.
தேர்தல் சட்டத்தின்படி, வேட்புமனுவில் தவறான தகவல்களை அளித்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது நிரூபிக்கப்பட்டால், மூடி மறைத்தால், அதிகபட்சமாக 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும், அல்லது தேர்தலில் கிடைத்த வெற்றி செல்லாது என அறிவித்து 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிடிஐ