காஷ்மீரில் 2 செல்ஃபோன் நிறுவன விற்பனையகங்களை குறிவைத்து தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசினர்.
காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் வோடஃபோன் மற்றும் ஏர்செல் செல்ஃபோன் தொலைதொடர்பு நிறுவனங்களின் விற்பனையகங்கள் மீது இன்று (வெள்ளிக்கிழமை) காலை கையெறி குண்டுகள் வீசப்பட்டன. 2 அடையாளம் தெரியாத நபர்கள் அலுவலகத்தினுள் நுழைந்து குண்டுவீசியதாக போலீஸார் தெரிவித்தனர்.
காஷ்மீரில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது அலுவலகங்களை மூட வேண்டும் என்று கடந்த மே மாதம் தீவிரவாதிகள் சிலர் எச்சரிக்கை விடுத்தனர். இதனால் வட காஷ்மீரின் சோப்பூர் பகுதியில் சுமார் 50 செல்ஃபோன் தொலைத்தொடர்பு டவர்கள் மூடப்பட்டன. மேலும் 2 பேர் கொல்லப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலை அடுத்து காஷ்மீரில் செல்ஃபோன் டவர்கள் மற்றும் அலுவலகங்கள் அனைத்துக்கும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.