மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ராவேஷ் குமார் : கோப்புப்படம் 
இந்தியா

ஐ.நா.வில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பிய சீனா: இந்தியா கடும் கண்டனம் 

செய்திப்பிரிவு

புதுடெல்லி

ஐக்கிய நாடுகள் சபையின் 74-வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை சீனா எழுப்பியதற்கு இந்தியா சார்பில் கடும் கண்டனம் விடுக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபையின் 74-வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் நேற்று பிரதமர் மோடியும், அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் பேசினர்.

பிரதமர் மோடி தனது உரையின் போது காஷ்மீர் விவகாரம் குறித்து எந்தவிதத்திலும் குறிப்பிடவில்லை, ஆனால், தீவிரவாதத்தை ஒழிக்க உலக நாடுகள் ஒருங்கிணைய வேண்டும் என்று வலியறுத்தினார்.

ஆனால்,ஐநாவில் 50 நிமிடங்கள் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தனது பேச்சில் பாதிநேரம் காஷ்மீர் நிலவரம் குறித்தும், இந்தியாவின் நிலைப்பாட்டையும் கடுமையாக விமர்சித்தார். இதற்கு இந்தியா சார்பில் தகுந்த பதிலடி தரப்பட்டது.

இந்த சூழலில் ஐ.நா.வில் சீனாவும் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பி பேசியது. அந்நாட்டின் வெளியுறுவுத்துறை அமைச்சர் வாங் யி பேசுகையில், " ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் அமைதியான முறையில் தீர்த்துக்கொள்ள வேண்டும். ஐநாவில் தீர்மானத்தின் படி காஷ்மீர் விவகாரத்தில் தீர்வு காண வேண்டும். அதுவரை காஷ்மீர் நிலைப்பாடு மாறக்கூடாது. தன்னிச்சையாக முடிவு ஏதும் எடுப்பு சரியல்ல" எனத் தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் சீனா தேவையில்லாமல் தலையிட்டதற்கு இந்தியா சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ராவிஷ் குமார் இன்று டெல்லியில் நிருபர்களிடம் கூறுகையில், " ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை இந்தியாவின் ஒரு பகுதிகள். சமீபத்தில் நடந்துள்ள சம்பவங்கள் அனைத்தும் எங்களின் உள்நாட்டு விவகாரம்.

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பதை சீனா நன்கு அறியும். இது முற்றிலும் இந்தியாவின் உள்நாட்டு பிரச்சினை. இந்தியாவின் இறையான்மை, எல்லைஒருங்கிணைப்புக்கு மற்ற நாடுகள் மதிப்பளிக்கும் என்று விரும்புகிறோம். அதேபோல பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் சீனாவும்,பாகிஸ்தானும் சாலை அமைத்து வருவதையும் நிறுத்த வேண்டும் " எனத் தெரிவித்தார்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்து ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு அறிவித்தது. இந்த உத்தரவு வரும் அக்டோபர் 31-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.


பிடிஐ

SCROLL FOR NEXT