யாகூப் மேமன் வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இருவரும் முரண்பட்ட தீர்ப்பு வழங்கியதால் வழக்கு விசாரணை கூடுதல் நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.
கடந்த 93-ம் ஆண்டு நடந்த மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய யாகூப் மேமனுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு, அவரது தூக்குத் தண்டனையை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. இதையடுத்து, நாக்பூர் மத்திய சிறையில் வரும் 30-ம் தேதி அவர் தூக்கிலிடப்பட உள்ளார். இந்த உத்தரவுக்கு தடை கோரி, யாகூப் மேமன் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அனில் தவே, குரியன் ஜோசப் அடங்கிய அமர்வு முன்பு நேற்றுமுன்தினம் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி குரியன் ஜோசப் புதிய பிரச்சினை ஒன்றை எழுப்பினார்.
‘யாகூப் மேமனின் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டபோது, சீராய்வு மனுவை விசாரித்த நீதி பதிகள் அனைவருக்கும் மனுவின் நகல் வழங்கப்பட வேண்டும் என்பது சட்ட விதிமுறை. இந்த சட்ட விதிமுறையை மத்திய அரசு ஏன் பின்பற்றவில்லை. சீராய்வு மனுவை அனில் தவே, சலமேஸ்வர் மற்றும் நான் அடங்கிய அமர்வு விசாரித்தது. மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டபோது, என்னையும் நீதிபதி சலமேஸ்வரையும் விசாரணை அமர்வில் சேர்க்கவில்லை. தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகள் டி.எஸ்.தாக்கூர், அனில் தவே அடங்கிய அமர்வு மறுசீராய்வு மனுவை விசாரித்து தள்ளுபடி செய்துள்ளது. இந்த வழக்கில் விதிகள் மீறப்பட்டுள்ளது குறித்து, மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.
தண்டனைக்கு தடை
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி, ‘மறு சீராய்வு மனு குறித்து ஏற்கெனவே விசாரித்து தீர்ப்பளிக்கப்பட்டுவிட் டது. இப்போது, தூக்கு தண்ட னையை நிறைவேற்றுவது குறித்த விவகாரம் மட்டுமே நீதிமன்றத்தின் முன் உள்ளது. வேறு எதையும் இப்போது விவாதிக்க இடமில்லை’ என்று வாதிட்டார். இதையடுத்து, நீதிபதிகள் இருவரும் முரண்பட்ட தீர்ப்பை அளித்தனர். நீதிபதி குரியன் ஜோசப், ‘யாகூப் மேமன் தூக்கு தண்டனையை நிறைவேற்ற தடை விதித்ததுடன், மறுசீராய்வு மனுவை மீண்டும் விதிமுறைகளின்படி, விசாரிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.
இதை ஏற்காத மற்றொரு நீதிபதி அனில் தவே, ‘தூக்கு தண்டனைக்கு தடை விதிக்க முடியாது. மகாராஷ்டிர மாநில ஆளுநர் முன் தாக்கல் செய்யப்பட்டுள்ள கருணை மனு மீது அவர் ஜூலை 30-ம் தேதிக்கு முன்போ, பின்போ முடிவெடுக்கலாம்’ என்று உத்தரவிட்டார்.
நீதிபதிகள் இருவரும் முரண்பட்ட தீர்ப்பளித்ததால் 2 தீர்ப்புமே செல்லாது என்ற நிலை ஏற்பட்டது. இதையடுத்து, இரு நீதிபதிகளும் இணைந்து வழக்கை கூடுதல் நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்ற வலியுறுத்தி தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து தலைமை நீதிபதி உத்தரவின் பேரில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பி.சி.பந்த், அமிதவாராய் அடங்கிய அமர்வு இந்த வழக்கை இன்று விசாரிக்க உள்ளது.