இந்தியா

தேசிய குடிமக்கள் பதிவேடு உ.பி.யிலும் தயாரிக்கப்படும்: முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு

செய்திப்பிரிவு

லக்னோ

தேவை ஏற்படும்போது உத்தர பிரதேசத்திலும் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்படும் என்று அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

அசாம் மாநிலத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை கண்டறிய தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்பட்டது. இந்த பதிவேட்டின் இறுதிப் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. இதில் 19 லட்சம் பேரின் பெயர்கள் இடம்பெறவில்லை. அவர்களை தடுப்பு காவல் மையங்களில் அடைக்க அந்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்துக்கு பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஹரியாணாவில் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்படும் என்று மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் நேற்று முன்தினம் அறிவித்தார்.

அவரைத் தொடர்ந்து உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் கூறும்போது, "தேசத்தின் பாதுகாப்புக்காக நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்பட வேண்டும். தேவை ஏற்படும்போது உத்தர பிரதேசத்திலும் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்படும். இத்திட்டம் மாநிலத்தில் பகுதி, பகுதியாக அமல் செய்யப்படும்" என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT