புதுடெல்லி
டெல்லி பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தேர்தலில் ஆர்எஸ்எஸ் ஆதரவு மாணவர் அமைப்பான ஏபிவிபி தலைவர் உட்பட 3 முக்கிய பதவிகளை கைபற்றியது. காங்கிரஸ் ஆதரவு மாணவர் அமைப்பான என்எஸ்யுஐ செயலாளர் பதவியை கைபற்றியது.
டெல்லியில் பெரும்பாலன கல்லூரிகள் டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் உறுப்பு கல்லூரிகளாக உள்ளன. இந்த பல்லைக்கழகத்தின் மாணவர் பேரவைக்கு தேர்தல் நடைபெற்றது.
தலைவர், துணைத் தலைவர், செயலாளர், இணைச் செயலாளர் ஆகிய பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 52 கல்லூரிகளை சேர்ந்த 1.44 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவியர் கலந்து கொண்டு வாக்களித்தனர்.
பொதுத் தேர்தல்களை போலவே இந்த தேர்தலில் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. தேர்தல் பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
இந்த தேர்தலில் பாஜக ஆதரவு மாணவர் அமைப்பான ஏபிவிபி தலைவர் உட்பட 3 முக்கிய பதவிகளை கைபற்றியது. காங்கிரஸ் ஆதரவு மாணவர் அமைப்பான என்எஸ்யுஐ, இடதுசாரி மாணவர் கூட்டமைப்பு உள்ளிட்ட பல மாணவர் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் போட்டியிட்டனர்.
இதில் ஏபிவிபி மாணவர் அமைப்பு தலைவர், துணைத் தலைவர், இணைச் செயலாளர் உள்ளிட்ட 3 முக்கிய பதவிகளையும் கைபற்றியது. என்எஸ்யுஐ செயலாளர் பதவியை கைபற்றியது.
தலைவர் பதவிக்கு ஏபிவிபி சார்பில் போட்டியிட்ட அஷ்வித் தஹியா, என்எஸ்யுஐ வேட்பாளர் சேத்தனா தியாகியை 19 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
இதுபோலவே துணைத் தலைவர் தேர்தலில் ஏபிவிபியின் பிரதீப் தன்வர், இணைச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட ஷிவாங்கி கார்வல் ஆகியோரும் வெற்றி பெற்றனர்.
செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட என்எஸ்யுஐ வேட்பாளர் ஆஷின் லம்பா 2,053 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.