அதிக லோடு ஏற்றியதாகக் கூறி ராஜஸ்தானில் லாரி டிரைவர் ஒருவருக்கு 1.41 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் புதிய மோட்டார் வாகனச் சட்டம் கடந்த 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அதிக அளவில் அபராதங்கள் விதிக்கப்பட்டு வருகின்றன.
மோட்டார் வாகனச் சட்டத் திருத்தம் கடந்த 1-ம் தேதி அமலுக்கு வந்தது. இதன்படி போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கான அபராதம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றவருக்கு ரூ.23,000 அபராதம் விதிக்கப்பட்டது.
ஒடிசாவில் சத்தீஸ்கரை நோக்கிச் சென்று கொண்டிருந்த சரக்கு லாரி ஒன்றின் ஓட்டுநரிடம் உரிமம் இல்லாதது உட்பட பல விதிமீறல்களுக்காக அவருக்கு ரூ.86,000 அபராதம் விதிக்கப்பட்டது.
டெல்லியின் ஷேக் சாராய் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஒரு இளைஞர் போதையில் இருந்ததாக போலீஸார் அவருக்கு ரூ.25,000 அபராதம் விதித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் தனது இருசக்கர வாகனத்தைத் தீ வைத்து எரித்தார். இது போன்ற எண்ணற்ற சம்பவங்கள் நாடு முழுவதும் வாகன ஓட்டிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில் சேர்ந்த லாரி டிரைவர் ஒருவருக்கு ரூ. 1.41 லட்சம் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் ராஜஸ்தானில் நடந்துள்ளது.
ராஜஸ்தானை சேர்ந்தவர் பக்வான் ராம். இவருக்கு சொந்தமான சரக்கு லாரி ஒன்றில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக மணல் ஏற்றிச் சென்றதாக கூறி கடந்த செப்டம்பர் 5 அன்று ஒரு டன் மணலுக்கு ரூ. 20,000 வீதம் ரூ. 48,000 போக்குவரத்து போலீஸார் அபராதம் விதித்தனர். அதோடு லாரிக்கான ஆவணங்கள் எதுவும் இல்லையெனக் கூறி மொத்தமாக 70,800 அபராதம் விதிக்கப்பட்டது. ஓட்டுநருக்கான அபராதமாக 70,000 ரூபாய் மொத்தம் 1.41 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
நாடு முழுவதும் இதுவரை விதிக்கப்பட்ட அபராதங்களிலேயே இதுதான் அதிகத் தொகையாகும்.