பதான்கோட்,
பதான்கோட் விமானப்படைத் தளத்தில் இருந்து மிக்-21 ரக போர் விமானத்தை இயக்கிய விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான், விமானப்படைத் தளபதி பிரேந்திர் சிங் பி.எஸ்.தனவோவுடன் ஒன்றாக பயணித்தார்.
புல்வாமா தாக்குதலுக்கு பின் பாகிஸ்தான் எல்லையான பாலகோட் பகுதிக்குள் புகுந்து தீவிரவாதி முகாம்களை அழித்த இந்திய விமானப்படை கடந்த பிப்பரவரி 27-ம் தேதி திரும்பியது. அப்போது இந்திய விமானப்படைக்கும், பாகிஸ்தான் விமானப்படைக்கும் வானில் ஏற்பட்ட மோதலில் பாகிஸ்தானின் எப்-16 ரக போர்விமானத்தை அபிநந்தன் தான் இயக்கிய மிக் பைஸன் ரக விமானத்தால் சுட்டு வீழ்த்தி, பாகிஸ்தான் பகுதிக்குள் பாரசூட் மூலம் குதித்தார்.
இதையடுத்து, பாகிஸ்தான் ராணுவத்தினர் அபிநந்தனை கைது செய்து இரு நாட்களுக்குப்பின் அவரை இந்திய தூதரகத்திடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்துக்குப்பின் 6 மாதங்கள் ஓய்வில் இருந்த அபிநந்தன் கடந்த மாதம் பணிக்கு திரும்பினார். ஆனால், அவரை மிக் ரக விமானத்தை இயக்க தடைவிதிக்கப்பட்டு இருந்தது. அதன்பின் அனைத்துவிதமான பரிசோதனைகளிலும் தேர்வாகி மீண்டும் விமானத்தை இயக்கத் தொடங்கினார்.
அபிநந்தனுக்கு கடந்த இரு வாரங்களுக்கு முன் நடத்தப்பட்ட சோதனையில் மிக்-21 போர் விமானத்தை இயக்கி தேர்ச்சி பெற்றார்.
இந்நிலையில், பதான்கோட் விமானப்படைத் தளத்தில் இருந்து விமானப்படை ஏர்சீப் மார்ஷல் தனோவாவுடன், மிக்-21 போர் விமானத்தில் அபிநந்தன் ஒன்றாக வானில் பறந்தார்.இதுகுறித்து விமானப்படையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், " பஞ்சாபில் உள்ள பதான்கோட் விமானப்படைத் தளத்தில் இருந்து அபிநந்தன், ஏர்சீப் மார்ஷல் தஹோனாவுடன் மிக்-21 போர் விமானத்தில் பறந்தார். கடந்த மாதம் அபிநந்தன் அனைத்துவிதமான சோதனையிலும் தேர்ச்சி பெற்றார், உடல்தகுதியும் பெற்று விமானத்தை இயக்க அனுமதிக்கப்பட்டார். இன்று ஏர்சீப் மார்ஷலுடன் பறந்துள்ளார்.ஏறக்குறைய 30 நிமிடங்கள் வானில் மிக்-21 போர்விமானத்தில் இருவரும் பறந்தனர்" எனத் தெரிவித்தார்.
பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்திய துணிச்சல் மிக்க செயலுக்காக அபிநந்தனுக்கு வீர் சக்கரா விருது சுதந்ததின விழாவில் வழங்கப்பட்டதுகுறிப்பிடத்தக்கது.
பிடிஐ