பிரதிநிதித்துவப் படம். 
இந்தியா

லட்சியவாதியான கணவன்; அன்பு வேண்டிய மனைவி: திருமணமான சில நாட்களிலேயே முறிந்து போன உறவின் சோகம்

செய்திப்பிரிவு

போபால்

மாணவர்களை ஜெயிக்க வைப்பதே லட்சியம் என்று சதா போட்டித் தேர்வுகள் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பவருடன் வாழ முடியாது என்று புதியதாக திருமணம் ஆன இளம்பெண் ஒருவர் விவாகரத்து கோரியுள்ளார்.

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் பூமியில் அதை நிலை நிறுத்திக்கொள்ள கொஞ்சமாவது அர்ப்பணிப்பு உணர்வுத் தேவை என்று சமீபத்திய சம்பவம் ஒன்று உணர்த்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் புதியதாக திருமணம் ஆன தம்பதிகள் தற்போது நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி வந்துள்ளனர். அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் மாணவர்களை வெற்றிபெற செய்ய வேண்டும் என்ற எல்லைக்குள்ளேயே தனது முழுக்கவனத்தையும் செலுத்தி தன்னைப் புறக்கணிப்பதாக புதியதாக திருமணமான மனைவி விவகாரத்து மனுவில் தெரிவித்துள்ளார்.

மாவட்ட சட்ட சேவை ஆணையத்தின் வழக்கறிஞர் நூருன்னிஸா கான் இது குறித்து கூறியதாவது:

கணவன் மனைவி இருவரையும் தனித்தனியே அழைத்து நான் பேசினேன். அப்போது தெரியவந்த ஒரு விஷயம் அப்பெண்ணுக்குத் தேவை கணவனின் அன்பு. ஆனால் கணவரோ தன்னுடைய லட்சியங்களை நேசிக்கும் அளவுக்கு தனது மனைவியை நேசிக்கவில்லை என்பதுதான்.

கணவன் எப்போதும் யுபிஎஸ்சி தேர்வுகள் மற்றும் மாநில அரசுப் பணிகளுக்கான தேர்வுகள் போன்ற போட்டித் தேர்வு தொடர்பானவற்றுக்குள்ளேயே நின்றுகொண்டிருக்கிறார். அதைத் தாண்டி மனைவியை ஒரு பொருட்டாக அவர் மதிப்பதேயில்லை.

கணவரிடம் பேசியபோது ஒரு விஷயம் தெரிந்தது. அவர் ஒரு பி.எச்டி கல்வியாளர். ஆனால் தனது லட்சியங்களுக்கு இடையூறாக இருக்கும் என்று திருமணத்தில் விருப்பம் இல்லாமலேயே அவர் இருந்துள்ளார். வயதான நிலையில் உள்ள அவரது பெற்றோர்கள் உடல்நிலை குன்றியதனால் அவர்கள் வற்புறுத்தலின்பேரில் அவர் இந்த திருமணத்தை செய்துகொண்டதாக தெரிந்தது.

இவ்வாறு மாவட்ட சட்ட சேவை ஆணைய வழக்கறிஞர் தெரிவித்தார்.

          
SCROLL FOR NEXT