இந்தியா

தேசிய குடிமக்கள் பதிவேடு: பெயர் விடுபட்டவர்கள் முறையிட 400 தீர்ப்பாயங்கள்: அசாம் அரசு உத்தரவு

செய்திப்பிரிவு

திஸ்பூர்
தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பெயர் விடுபட்டவர்கள் முறையீடு செய்வதற்காக 400 வெளிநாட்டினர் தீ்ர்ப்பாயம் அமைக்கப்படும் என அசாம் அரசு தெரிவித்துள்ளது.
அசாமில் உள்ள வங்கதேசத்தவர்களை கண்டறியும் பொருட்டு அம்மாநிலத்தில் குடிமக்கள் தேசிய பதிவேடு கொண்டு வரப்பட்டது. இதில், வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா வந்து 6 ஆண்டுகளாக வசித்து வரும் இந்துக்கள், சமணர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், பவுத்தர்களுக்கு குடியுரிமை வழங்க வகை செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டினர் அனைவரையும் வெளியேற்ற வேண்டும் என அசாம் கணபரிஷத் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்பட்ட குடிமக்கள் தேசிய பதிவேடு வரைவு பட்டியலில் 40 லட்சத்திற்கும் அதிகமானவர்களின் பெயர்கள் அகற்றப்பட்டன. அப்போது பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.
இந்தநிலையில், தேசிய குடிமக்கள் பதிவேடு இறுதிபட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. இதனால் அசாமில் ஒருவித பதற்றம் நிலவுகிறது.
மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம், பதற்றப்படவும் தேவையில்லை என அசாம் முதல்வர் சர்பானந்த சோனவால் தெரிவித்துள்ளார். அதுபோலவே இந்திய குடிமக்களா என்ற சர்ச்சை எழும் நபர்கள் குறித்த விவகாத்தில் இறுதி முடிவெடுப்பதற்காக தீர்ப்பாயங்கள் அமைக்கப்படும், இதில் முறையீட்டு தீர்வு பெறலாம் எனவும் முதல்வர் சேனாவால் அறிவித்தார்.
இந்தநிலையில் அசாம் மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் சஞ்சய் கிருஷ்ணா கூறியதாவது
தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பெயர் விடுபட்டவர்கள் அச்சப்படத் தேவையில்லை. அவர்கள் தங்கள் தரப்பில் விளக்கத்தை தெரிவித்து மீண்டும் குடிமக்கள் பதிவேட்டில் பெயரை இணைத்துக் கொள்ளலாம். அதற்காக 200 வெளிநாட்டினர் தீர்ப்பாயம் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 200 தீர்ப்பாயங்கள் அமைக்கப்படும். பெயர் விடுபட்டவர்கள் இதில் முறையிட்டு தங்கள் பெயர்களை சேர்த்துக் கொள்ளலாம்’’ எனக் கூறினார்.

SCROLL FOR NEXT