புதுடெல்லி,
வங்கிமோசடி ஆண்டுக்கு ஆண்டு 15 சதவீதம் உயர்ந்துள்ளதாக ரிசர்வ் வங்கியில் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதையடுத்து, இதுபோன்ற மிகப்பெரிய வங்கி மோசடியை எந்த பொறுப்பாளர் அனுமதிக்கிறார் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
ரிசர்வ் வங்கியின் 2018-19-ம் ஆண்டுக்கான வரவுசெலவு அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அதில் 2018-19-ம் ஆண்டில் வங்கி மோசடிகள் ஆண்டுக்கு ஆண்டு 15 சதவீதம் உயர்ந்துவிட்டதாகவும், அதன் தொகை 73.8 சதவீதம் உயர்ந்துவிட்டதாகவும் ரிசர்வ் வங்கி குறிப்பிட்டு இருந்தது.
கடந்த 2018-19-ம் ஆண்டில் வங்கித்துறையில் மொத்தம் 6 ஆயிரத்து 801 மோசடிகளும், அதன் மதிப்பு ரூ. 71 ஆயிரத்து 542.93 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017-18-ம் ஆண்டில் 5 ஆயிரத்து 916 மோசடிகளும், ரூ.41 ஆயிரத்து 167.04 கோடி மோசடியும் நடந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் அறிக்கையைச் சுட்டிக்காட்டி காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ட்விட்டரில் இன்று கருத்து தெரிவித்துள்ளார்,
அதில் ", வங்கி மோசடி இந்த அரசின் கீழ் அதிகரித்துவிட்டதாக நாட்டின் வங்கித்துறையில் மிகப்பெரிய நிறுவனமான ரிசர்வ் வங்கி கூறியிருக்கிறது. கடந்த 2018-19-ம் ஆண்டில் வங்கிக்கொள்ளை அதிகரித்துள்ளது.
ஏறக்குறைய ரூ.72 ஆயிரம் கோடி வங்கியில் மோசடி செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதுபோன்ற மிகப்பெரிய வங்கி மோசடியை நடக்க அனுமதித்த பொறுப்பாளர் யார்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
பிடிஐ