ஜூலை 16-ம் தேதியன்று கைது செய்யப்பட்ட டெல்லியைச் சேர்ந்த ரவீந்தர் குமார் என்ற பயங்கரமான தொடர் பாலியல் பலாத்கார கொலைக் குற்றவாளி, இதுவரை 30 சிறுமிகளை பலாத்காரம் செய்து கொலை செய்ததாக விசாரணையில் ஒப்புகொண்டுள்ளார்.
இது குறித்து காவல்துறை உதவி ஆணையர் விக்ரம்ஜித் சிங் கூறும்போது, “30 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக ரவீந்தர் குமார் ஒப்புக் கொண்டுள்ளார், இந்தக் குற்றச்செயல்கள் பெரும்பாலும் டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலேயே நடந்துள்ளது” என்றார்.
உத்தரப் பிரதேச மாநில காஸ்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த ரவீந்தர் குமார், டெல்லியில்தான் வசித்து வந்துள்ளார். விசாரணைக்காக நரேலா, பவானா, அலிபூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு குமாரை அழைத்து சென்றனர் போலீஸார்.
இவ்வாறு அழைத்துச் செல்லும் போதுதான் இவரால் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமிகள் பற்றிய விவரம் தெரிய வந்தது.
“நானே இந்த வழக்கை என் நேரடி விசாரணையின் கீழ் கொண்டு வந்துள்ளேன், ஆனால் 30 என்பது 40 ஆகக் கூட அதிகரிக்கலாம்”என்று உதவி ஆணையர் விக்ரம்ஜித் சிங் தெரிவித்தார்.
இதுவரை குமாரின் தொடர் கொலைகளின் எண்ணிக்கை 15ஆக இருக்கலாம் என்றே போலீஸ் தரப்பில் கருதப்பட்டு வந்தது.
ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் விஜய் நகர், பவானா, நரேலா, அலிபூர், பேகம்பூர் கஞ்சாவாலா, சமய்பூர் பாத்லி, மற்றும் பல இடங்களில் காணாமல் போன சிறுமிகள் பற்றிய புகார் ஏகப்பட்டது பதிவானது குறித்து தீவிர விசாரனையை டெல்லி போலீஸ் மேற்கொண்டது.
2008-ம் ஆண்டு முதல் ரவீந்திர குமார் இத்தகைய பாதகச் செயல்களில் ஈடுபட்டு வந்திருக்கலாம் என்று போலீஸ் இப்போது சந்தேகப்படுகிறது.
கடந்த ஆண்டு பேகம்பூரில் சிறுவன் ஒருவனை தாக்கியதாக ரவீந்தர் குமாரை போலீஸ் கைது செய்தது, இந்தச் சிறுவனை கடத்தி அவனது தொண்டையை கத்தியால் அறுத்து விட்டு ரவீந்தர் குமார் தப்பிச் சென்றுள்ளார். அந்தச் சிறுவன் இறந்து விட்டதாக குமார் தவறாக நினைத்துள்ளார்.
ஆனால் கட்டுமானத்தில் உள்ள கட்டடம் ஒன்றின் கழிவு நீர்த் தொட்டியில் ரத்தவிளாறாகக் கிடந்த சிறுவனை மீட்டனர் போலீஸார். ஆனால் அப்போது குமாரை விட்டுவிட்டது போலீஸ்.
அதன் பிறகு 6 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த புகார் தொடர்பாக ரவீந்தர் குமார் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் ஒரு சீரியல் ரேபிஸ்ட் மற்றும் கொலையாளியாக ரவீந்தர் குமாரை டெல்லி போலீஸ் அடையாளம் கண்டுள்ளது.