புதுடெல்லி
காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூரின் மனைவியான சுனந்தா புஷ்கரின் உடலில் 15 இடங்களில் காயம் இருந்தது பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக நீதிமன்றத்தில் டெல்லி போலீஸார் தெரிவித்தனர்.
திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி.யாக இருப்பவர் சசிதரூர். இவரது மனைவி சுனந்தா புஷ்கர், கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி 17-ம் தேதியன்று, டெல்லியில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர ஓட்டல் அறையில் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என முதலில் கருதப்பட்டது. பின்னர், பிரேதப் பரிசோதனையில், அவரது உடலில் விஷம் கலந்திருப்பது கண்டறியப்பட்டது.
மேலும், இதுதொடர்பாக டெல்லி போலீஸார் நடத்திய விசாரணையில், சசிதரூருக்கும், சுனந்தா புஷ்கருக்கும் இடையே தகராறும், மனக்கசப்பும் இருந்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, சுனந்தா புஷ்கரை தற்கொலைக்கு தூண்டியதாக சசி தரூர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. எனினும், இந்த வழக்கில் சசிதரூருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்நிலையில், இவ்வழக்கில் சசிதரூருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பதிவு செய்தவற்கான வாதங்கள், டெல்லி நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றன. அப்போது, டெல்லி காவல்துறை சார்பில் ஆஜரான அதுல் ஸ்ரீவத்சவா கூறியதாவது:
பிரேதப் பரிசோதனை அறிக்கை
யின்படி, சுனந்தா புஷ்கரின் உடலில் 15 இடங்களில் காயங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், அந்தக் காயங்களானது, அவரது மரணத்துக்கு 12 மணிநேரத்துக்கு முன்பு தொடங்கி 4 நாட்களுக்குள் ஏற்பட்டவை ஆகும். எனவே, சுனந்தா புஷ்கரை அவரது கணவர் சசிதரூர் அடித்து துன்புறுத்தியிருப்பது இதன் மூலம் தெரியவருகிறது.
மேலும், பாகிஸ்தான் பெண் நிருபர் ஒருவருடன் சசிதரூர் நெருக்கமான உறவு வைத்திருந்ததை அவரது இ-மெயில் தகவல்கள் உறுதி செய்கின்றன. இதுவே, சசிதரூருக்கும், சுனந்தா புஷ்கருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட இது காரணமாக இருந்திருக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.