இந்தியா

தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு இனி அடையாள ஆவணங்கள் தேவையில்லை

செய்திப்பிரிவு

தட்கல் முறையில் ரயில் பயணத்துக்கான டிக்கெட் முன்பதிவுக்கு வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் அடையாள ஆவணங்கள் தேவையில்லை என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுவரை, ஆன்லைன் மூலமும், ரயில்நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்கள் மூலமும் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு வாக்காளர் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்ஸ், ரேசன் கார்டு, பேன் கார்டு உள்ளிட்ட ஏதாவது ஒரு அடையாள ஆவணங்களின் நகல்களை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாக உள்ளது.

இந்நிலையில், வரும் செப்டம்பர் மாதம் முதல் தேதியில் இருந்து எந்த அடையாள ஆவணங்களையும் காட்டாமலேயே டிக்கெட்டுகளை பெறுவதற்கான வசதியை ரயில்வே நிர்வாகம் நடைமுறைப்படுத்த இருக்கிறது.

இதுதொடர்பாக ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மேம்படுத்தப்பட்ட இந்த புதிய விதிமுறைகளின்படி, செப்டம்பர் 1-ம் தேதி முதல் தட்கல் டிக்கெட் முன்பதிவின்போது எந்த அடையாள ஆவணங்களின் நகல்களையும் காட்டவேண்டிய கட்டாயம் இல்லை. எனினும், பயணத்தின்போது முன்பதிவு செய்யும் குழுவில் உள்ள யாராவது ஒருவர் உரிய அசல் ஆவணங்களை கையில் வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் அந்த டிக்கெட் கேன்சலாகிவிடும். அசல் ஆவணங்களை பயணித்தின்போது வைத்திருப்பதன்மூலம் அபராதத்தை தவிர்க்க முடியும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT