இந்து மதத்தைச் சேர்ந்த இளம்பெண்ணின் உடலைத் தகனம் செய்வதற்காக, முஸ்லிம்கள் சிலர் தங்கள் தோள்களில் சுமந்து சென்றனர். வழியெங்கும் 'ராம் நாம் சத்யா ஹை' என்று அவர்கள் கோஷமிட்டுச் சென்றது காண்போரை நெகிழ்ச்சியடையச் செய்தது.
மதங்களைக் கடந்த இந்த மனிதநேய சம்பவம் உ.பி.யைச் சேர்ந்த வாரணாசியின் ஹர்ஹுவா டீஹ் பகுதியில் நேற்று நடந்தது.
வாரணாசியில் வசித்துவந்த சோனி (19), சில தினங்களாக மலேரியா நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் மருத்துவமனைக்குச் சென்று உரிய சிகிச்சை எடுத்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று திடீரென அவர் உயிரிழந்தார்.
அவரது தந்தை ஹோரிலால் விஸ்வகர்மா சில ஆண்டுகளுக்கு முன்பு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு முடங்கிப் போயிருந்தார். மேலும் அவரது தாயார் இதய நோயாளி. குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே உறுப்பினர் சோனியின் சகோதரர் மட்டும்தான்.
சோனி இறந்தபோது, அக்கம் பக்கத்தில் வசிக்கும் முஸ்லிம் ஆண்கள் ஹொரிலாலின் வீட்டிற்கு வந்து தகனம் குறித்து கவலைப்பட வேண்டாம் என்று கூறினர். அவர்களில் சிலர் தங்கள் தொப்பிகளை அணிந்துகொண்டு, ஏற்பாடுகளைச் செய்து, பின்னர் தோள்களில் சடலத்தைச் சுமந்துகொண்டு அருகிலுள்ள மணிகர்னிகா காட்டிற்கு தகனம் செய்வதற்காக எடுத்துச் சென்றனர்.
இறுதியஞ்சலி ஊர்வலத்தின்போது இந்து மரபுப்படி வழக்கமாகச் சொல்வதுபோல் அவர்கள் வழியெங்கும் 'ராம் நாம் சத்யா ஹை' என்று கோஷமிட்டனர். இது வழியில் எதிர்ப்பட்டவர்களை மனம் நெகிழ வைத்தது.
மேலும், இறுதிச்சடங்கு செய்ய சோனியின் சகோதரருக்கு அவர்கள் உதவினார்கள். அவர்களில் சிலர் நிதி உதவியையும் செய்தனர்.
தகனத்திற்கு உதவிய மனிதர்களில் ஒருவரான ஷகீல் கூறுகையில், "யேஹி சத்யா ஹை (இதுதான் உண்மை). இது வாழ்க்கையின் இறுதியானது. ஆனால் குட்டி பிரச்சினைகளில் நாங்கள் தொடர்ந்து நம்மிடையே போராடுகிறோம்" என்றார்.